Jan 16, 2015

உள்ளம் தெளிவானால் உலகத்தையே பார்க்கலாம்

ஒரு மனிதனின் வெளிக்கண்கள் இரண்டும் தெளிவாக இருந்தால்-ஆரோக்கியமாக இருந்தால் இவன் தன்னை விட்டு மறையாத எதையும் பார்க்க முடியும். ஆனால் மனக்கண்-கல்புக்கண்-தெளிவானவன் தன்னை விட்டும் மறைந்தவற்றையும் அது கொண்டு பார்ப்பான். மனக்கண் தெளிவானவனுக்கு வெளிக்கண் தேவையில்லை.
இமாம் அப்துல்லாஹ் இப்னு அலவிய்யுல் ஹத்தாத் றஹ்மதுல்லாஹி அலைஹி அவா்கள் இரு கண் பார்வையையும் இழந்திருந்தார்கள். எனினும் அவா்கள் கூர்மையான பார்வை உள்ளவா்கள் போன்றே மற்றவா்களுக்குத் தென்பட்டார்கள்.

அவா்கள் வழமையாக அறை ஒன்றில் தனியாகவே உறங்குவார்கள். எவரையும் உள்ளே அனுமதிக்க மாட்டார்கள். ஒரு நாளிரவு தங்களின் பணியாளனிடம் நான் உறங்குவதற்காக அறையில் நுழைந்தால் எக்காரணம் கொண்டும் எவரும் உள்ளே வரக் கூடாது என்று எச்சரித்தார்கள்.

இவா்கள் இவ்வாறு கூறியது பணியாளனின் உள்ளத்தில் ஒரு சிந்தனை தோற்றுவித்தது. அறையில் நுழைய வேண்டாம் என்றுதானே கூறினார்கள். அறையில் நுழையாமல் ஒரு துவாரத்தின் வழியாகப் பார்க்கலாம் என்று நள்ளிரவில் பார்த்தான். அவனின் கண்களை அவனாலேயே நம்பமுடியாமற் போய்விட்டது. இமாம் ஹத்தாத் அவா்களின் உடல் முழுவதும் கண்கள் இருந்தது கண்டு வியந்து வியா்த்து நின்றான்
   
உள்ளே இருந்த இமாம் அவா்கள் எதிர் பாராமல் வெளியே வந்து கடற்கரையை நோக்கி மிக வேகமாக சென்றதைக் கண்டு அவனும் அவா்களைத் தொடா்ந்து சென்றான். இமாம் அவா்கள் அல்லாஹ், அல்லாஹ் என்று சொன்னவா்களாக கடலில் கால் வைத்து தரையில் நடப்பது போல் நீரின்மீது - கடலில்- நடந்து சென்றார்கள். அவா்களின் பின்னால் அவனும் அவா்கள் போல் அல்லாஹ், அல்லாஹ் என்று சொல்லிக் கொண்டு நடந்தான். அவ்வளவுதான் நீரில் மூழ்கி விட்டான். கை கொடுத்து அவனைத் தூக்கி எடுத்த இமாம் அவா்கள், அவனிடம் உனக்கு அல்லாஹ்வைத் தெரியாது என்னையே தெரியும் ஆகையால் அவனை அழைக்காமல் யா ஹத்தாத் என்று என்னை அழைத்துக் கொண்டுவா எனக்கூறி அவனையும் அழைத்து சென்றார்கள். பின்வருமாறு பாடிக்காட்டினார்கள்.

              إِنْ يَأْخُذِ اللهَ مِنْ عَيْنَيَّ نُوْرَهُمَا          فَإِنَّ قَلْبِيْ مُضِيْئٌ مَا بـِهِ ضَـرَبٌ
              اَرَى بِقَلْبِيَ دُنْيَايَ وَآخِـرَتِيْ           وَالْقَلْبُ يُدْرِكُ مَا لاَ يُدْرِكُ الْبَصَرُ

அல்லாஹ் எனது இரு கண்களின் ஒளியை எடுத்துக் கொண்டாலும் 
எனது உள்ளக்கண் - மனக்கண் - ஒளியுள்ளதாகவே இருக்கின்றது. ஆகையால் எனது உள்ளத்தைக் கொண்டு - மனக்கண் 
கொண்டு இவ்வுலகையும், மறுவுலகையும் நான் பார்க்கிறேன். வெளிக்கண்ணால் பார்க்க முடியாதவற்றை எல்லாம் 
மனக்கண்ணால் பார்க்க முடியும்.

(ஷாஹே ஸறன்தீப்)