அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹு
இலங்கை முஸ்லிம் சமூகம் ஸுன்னத்வல் ஜமாஅத் ஸூபிஸ தரீக்கா வழி முறை சார்ந்த சமூகமாகும். ஸுன்னத் வல் ஜமாஅத் ஸூபிஸ கொள்கையை பேணி பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஸுன்னத்வல் ஜமாஅத் ஸூபிஸ தரீக்கா வழி முறையை பின்பற்றும் இலங்கை வாழ் சகல முஸ்லிம்களுக்கும் இருக்கின்றது.
ஸுன்னத் வல் ஜமாஅத் ஸூபிஸ கொள்கை, தரீக்கா வழி முறை தொடர்பான பிழையான விளக்கங்கள், அடையாளப்படுத்தல்கள் அண்மைக்காலமாக சிலரால் முன்வைக்கப்பட்டு வருகின்றது.
ஸூபிஸம் என்பது இஸ்லாத்தின் ஆன்மீகப் பகுதியாகும். இது உள்ளம் சம்பந்தப்பட்ட ஆன்மீக வழிமுறையாகும். உள்ளத்தை பரிசுத்தப்படுத்தி இறைவனை அறிதல், அவனை வணங்குதல், அவற்றின் மூலம் அவனை அடைவதற்கான வழிகாட்டல்களை அது வழங்குகின்றது.
இஸ்லாமிய ஸூபித்துவ வழிமுறை மனிதனில் இயல்பாக அமைந்துள்ள தீய எண்ணங்களான கோபம், பொறாமை, வஞ்சகம், வேற்றுமை, கொலை, கொள்ளை, இனவேறுபாடு போன்றவற்றைக் களைந்து, கறைபடிந்த உள்ளத்தை இறையறிவினால் பரிசுத்தப்படுத்தி இறைவனுடன் அவனைச் சேர்த்து வைப்பதற்கான போதனைகளை வழங்குகிறது.
தரீக்கா என்பது நபிகள் நாயகம் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து இன்றுவரை வழிவழியாக ஸூபிஸ அறிவு போதிக்கப்பட்டு வரும் வழி முறையாகும்.
உலகளாவிய ரீதியில் தரீக்காக்கள் இஸ்லாமிய ஆன்மீகக் கல்வியை போதிக்கின்றன. இன்று உலக முஸ்லிம்களுக்கு மிக அவசியமானது ஸூபிஸ அறிவும், தரீக்கா வழிமுறையுமாகும்.