Nov 7, 2014

நேசிக்கும் நேசர் நெய்னார் முஹம்மத் வலீ!



பாசிப்பட்டணத்தில் பள்ளி கொண்டுள்ள
நேச மகனார் எங்கள் நெய்னார் வலிய்யுல்லாஹ்!
ஆசை அனைத்தையும் அவனுக்காய் துறந்திட்ட
நேசராய் வாழ்ந்த நெய்னார் வலிய்யுல்லாஹ்!

அப்பா ராவுத்தர் அப்பாவின் வழியிலே
தப்பாத தனையனாய் தரணியில் பிறந்திட்டார்
அப்போதும் இப்போதும் அல்லாஹ்வின் அருளினை
எப்போதும் பெற்றிட்ட ஏற்ற வலிய்யுல்லாஹ்!

உள்ளமை அல்லாஹ்வை உள்ளத்தால் உணர்ந்திட்டார்
இல்லாமை உலகத்தை எடுத்துப் பார்த்திட்டார்
வல்லமை வல்லோனின் வாய்மையை அறிந்திட்டார்
நல்லோர்கள் நபீமார்கள் நல்லாசி பெற்றிட்டார்

சின்னஞ் சிறு வயதினிலே சிறப்புகள் பெற்ற மகன்
உண்ண வைத்த மீனுக்கும் உயிர் கொடுத்த மகன்
விண்பார்த்து மின்பரிலே வியாக்கியானம் சொன்னமகன்
தன்னை உணர்ந்து தலைவனின் தத்துவம் சொன்ன மகன்

காலத்தால்  வாழ்ந்தாலும் கல்பினிலே வாழும் வலீ
கோலத்தைப் பார்க்காது கொள்கையில் இருந்த வலீ
ஆலத்துக்கும் மூலம் அவனே என்ற வலீ
ஞாலத்தில் இருக்கையிலே ஞானம் சொன்ன வலீ

கவிஞர் MACM.றபாய்தீன்