Oct 26, 2015

அருள் நபீ அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள்

மௌலவீ MM. அப்துல் மஜீத் றப்பானீ அவர்கள்
சிரேஷ்ட விரிவுரையாளர் - 
அல்ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் அறபுக் கலாபீடம்

தொடர் – 11


அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் ஸெய்யிதுனா அலீ இப்னு அபீதாலிப் கர்றமல்லாஹு வஜ்ஹஹு அன்னவர்களின் கண்களில் உமிழ்ந்ததன் பின்னர் அவர்களுக்கு அதனருளினால் கண் நோயோ, தலையிடியோ ஏற்படவில்லை. அண்ணலெம்பெருமானின் உமிழ் நீரின் அருளினால் அவற்றிலிருந்து நிவாரணம் பெற்றார்கள்.

மாத்திரமல்ல இந்நிகழ்வின் போது ஸெய்யிதுனா அலீ இப்னு அபீதாலிப் கர்றமல்லாஹு வஜ்ஹஹு அன்னவர்களின் கண்களில் உமிழ்ந்த காருண்ய நபீ அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் அவர்களுக்காக ஒரு பிரார்த்தனை புரிந்தார்கள். அதன் பின்னர் சூடு, குளிர் ஆகியவை அவர்களுக்கு எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அண்ணலின் உமிழ் நீரின் அருளினால், அண்ணலின் பிரார்த்தனையின் பொருட்டினால் மாரி காலத்தில் கோடை காலத்து ஆடைகளையும், கோடை காலத்தில் மாரி காலத்து ஆடைகளையும் அணியக்கூடியவர்களாகத் திகழ்ந்தார்கள். ஸெய்யிதுனா அலீ இப்னு அபீதாலிப் கர்றமல்லாஹு வஜ்ஹஹு அன்னவர்கள்.

عَنْ عَبْدِ اللهِ بْنِ أَبِيْ لَيْلَىَ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ قَالَ كَانَ يَسْمُرُ مَعَ عَلِيٍّ كَرَّمَ اللهُ وَجْهَهُ. وَكَانَ عَلِيٌّ كَرَّمَ اللهُ وَجْهَهُ يَلْبِسُ ثِيَابَ الصَّيْفِ فِي الشِّتَاءِ. وَثِيَابَ الشِّتَاءِ فِي الصَّيْفِ. فَقُلْتُ لِأَبِيْ لَوْ سَأَلْتَهُ فَسَأَلَهُ. فَقَالَ إِنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ بَعَثَ إِلَيَّ. وَأَنَا أَرْمَدُ الْعَيْنِ يَوْمَ خَيْبَرَ. فَقُلْتُ يَارَسُوْلَ اللهِ إِنِّيْ أَرْمَدُ. فَتَفَلَ فِيْ عَيْنِيْ. فَقَالَ أَلَّلهُمَّ أَذْهِبْ عَنْهُ الْحَرَّ وَالْبَرْدَ. فَمَا وَجَدْتُ حَرًّا وَلاَ بَرْدًا مُنْذُ يَوْمَئِذٍ.

அப்துல்லாஹ் இப்னு அபீ லைலா றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.

எனது தந்தை அலீ கர்றமல்லாஹு வஜ்ஹஹு அன்னவர்களுடன் இரவு வேளையில் பேசிக் கொண்டிருக்கக் கூடியவர்களாக இருந்தார்கள். அலீ கர்றமல்லாஹு வஜ்ஹஹு அன்னவர்கள் மாரி காலத்தில் கோடை காலத்து ஆடைகளையும், கோடை காலத்தில் மாரி காலத்து ஆடைகளையும் அணியக் கூடியவர்களாக இருந்தார்கள். இது பற்றி நீங்கள் அவர்களிடம் கேட்டாலென்ன என்று எனது தந்தையிடம் கூறினேன். எனது தந்தை இது பற்றி அவர்களிடம் கேட்டார். அதற்கவர்கள் பின்வருமாறு பதிலளித்தார்கள்.

ஹைபர் யுத்த தினத்தில் நான் கண்ணோய்யுற்றிருந்த நிலையில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் என்னை வரும்படி செய்தியனுப்பினார்கள். நான் அவர்களிடம் “யாரஸுலல்லாஹ்! நான் கண்நோயுற்றிருக்கின்றேன்” என்று கூறினேன். உடனே அவர்கள் எனது கண்ணில் உமிழ்ந்தார்கள். பின்னர் பின்வருமாறு பிரார்த்தித்தார்கள்.

“இறைவா! இவரை விட்டும் சூட்டையும், குளிரையும் போக்கி 
வைப்பாயாக அன்றிலிருந்து சூட்டையோ, குளிரையோ நான் பெறவில்லை.”
ஸியறு அஃலாமின் நுபலா, பாகம் – 01 பக்கம் – 571

وَأَرْسَلَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى عَلِيٍّ يَوْمَ خَيْبَرَ وَكَانَ أَرْمَدَ. فَتَفَلَ فِيْ عَيْنَيْهِ. وَقَالَ أَلَّلهُمَّ أَذْهِبْ عَنْهُ الْحَرَّوَالْبَرْدَ. قَالَ فَمَا وَجَدْتُ حَرًّا وًلاَبَرْدًا مُنْذُ ذَلِكَ الْيَوْمِ. وَلاَرَمِدَتْ عَيْنَايَ.

ஹைபர் யுத்த தினத்தில் அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் அலீ கர்றமல்லாஹு வஜ்ஹஹு அன்னவர்களுக்கு செய்தியனுப்பினார்கள். அந்நேரம் அவர்கள் கண்நோயுற்றிருந்தார்கள். உடனே அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் அவர்களின் இரண்டு கண்களிலும் உமிழ்ந்தார்கள். பின்னர் இறைவா! இவரை விட்டும் சூட்டையும், குளிரையும் போக்கிவிடுவாயாக என்று பிரார்தித்தார்கள்.

அன்றிலிருந்து சூட்டையோ, குளிரையோ நான் பெற்றுக் கொள்ளவில்லை. எனது கண்களில் கண்நோய் ஏற்படவுமில்லை என்று அலீ கர்றமல்லாஹு வஜ்ஹஹு அன்னவர்கள் கூறினார்கள்.
அல் மவாஹிபுல் லதுன்னிய்யஹ்
பாகம் – 04 பக்கம் – 485

அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் ஸெய்யிதுனா அலீ கர்றமல்லாஹு வஜ்ஹஹு அன்னவர்கள் கண்நோயுற்றிருந்த வேளையில் அவர்களையழைத்து, தங்களருகில் அவர்களை அமரச்செய்து அவர்களின் கண்களில் உமிழ்ந்திருக்கின்றார்கள். அருள் நிறைந்த அவர்களின் கரங்களினால் அவர்களின் கண்களைத் தடவியிருக்கின்றார்கள். என்பதை மேற்கூறப்பட்டவற்றிலிருந்து நாம் விளங்கிக் கொள்ள முடியும்.

அண்ணலின் உமிழ் நீரின் பறக்கத்தினால், அண்ணலின் கரங்களின் பறக்கத்தினால், அண்ணலின் பிரார்த்தனையின் பறக்கத்தினால் கண்நோயிலிருந்து நிவாரணம், தலையிடி ஏற்படாமை, சூடு, குளிர் ஆகியவற்றின் தாக்கம் ஏற்படாமை போன்ற பிரயோசனங்களை பெற்றார்கள் ஸெய்யிதுனா அலீ இப்னு அபீதாலிப் கர்றமல்லாஹு வஜ்ஹஹு அன்னவர்கள்.


அண்ணலவர்கள் இறை ஜோதியல்லவா! அவர்களுக்கு நிகரானவர்கள் யாரும் கிடையாது. எங்களைப் போன்ற சாதாரண மனிதன் என்று அவர்களை நம்புபவன் முஃமின் அல்ல. அவன் வழிகெட்டவன். அண்ணலின் ஷபாஅத்தை விட்டும் தூரமானவன். அண்ணலின் அருள் பெற்ற ஸஹாபஹ் – தோழர்களின் பொருட்டு கொண்டு அல்லாஹு தஆலா எமக்க அருள் புரிவானாக.

- ஆமீன் யாறப்பல் ஆலமீன் -