Jul 19, 2013

நோன்பின் இரகசியங்கள்.

தொடர் – 03
அறிவுக்கடல் ஹுஜ்ஜதுல் இஸ்லாம் அல் அல்லாமா முஹம்மத் இப்னு அபீஹாமித் அல் கஸாலீ (றழிஅவர்களின் இஹ்யாஉ உலூமித்தீன் என்ற நூலிலிருந்து
தமிழில் : மௌலவீ MM அப்துல் மஜீத் ’றப்பானீ

விரிவுரையாளர் : றப்பானிய்யஹ் அறபுக் கலாபீடம்.


நோன்பு என்பது 3 படித்தரங்களை உடைய ஒன்றாகும்.
  1. பொதுவானவர்களின் நோன்பு
  2.  விஷேடமானவர்களின் நோன்பு
  3. அதி விஷேடமானவர்களின் நோன்பு

பொதுவானவர்களின் நோன்பு என்பது வயிற்றையும், மர்மஸ்தானத்தையும் தடுத்திருத்தல். விஷேடமானவர்களின் நோன்பு என்பது கேள்வி, பார்வை, நாக்கு, கை, கால் ஏனைய றுப்புக்களை பாவங்களிலிருந்து தடுத்துக் கொள்ளல்.
அதி விஷேடமானவர்களின் நோன்பு என்பது மோசமான எண்ணங்களை விட்டும், உலக சிந்தனைகளை விட்டும் உள்ளத்தை
தடுத்துக் கொள்ளல். இன்னும் மொத்தமாக அல்லாஹ் அல்லாதவற்றை விட்டும் உள்ளத்தை தடுத்துக் கொள்ளல். இந்த வகை நோன்பில்  அல்லாஹ் அல்லாதவற்றைப் பற்றி சிந்திக்கும் போதும், இறுதி நாளைப் பற்றி சிந்திக்கும் போதும் அந்த நோன்பு முறிந்து விடும்.
விஷேடமானவர்களின் நோன்பு என்பது ல்லடியார்களின் நோன்பாகும். அதுதான் பாவங்களை விட்டும் றுப்புக்களைத் தடுத்திருத்தல். இது ஆறு அம்சங்களைக் கொண்டதாகும்.
01. பார்வையைத் தாழ்த்துதல்:
ழிவான, வெறுக்கப்படக் கூடிய ஒன்றைப் பார்ப்பதிலிருந்து பார்வையைத் தாழ்த்திக் கொள்ளுதல். இன்னும் அல்லாஹ்வின் நினைவை விட்டும் உள்ளத்தை திருப்பக் கூடிய ஒன்றைப் பார்ப்பதை விட்டும் பார்வையைத் தாழ்த்திக் கொள்ளுதல்.
பார்வை என்பது இப்லீஸ் (லஃனதுல்லாஹி அலைஹி) உடைய அம்புகளில் நஞ்சூட்டப்பட்ட ஓர் அம்பாகும். அல்லாஹ்வைப் பயந்து எவன் அதை விட்டானோ அல்லஹுதஆலா அவனுக்கு ஈமானை வழங்குகிறான். அதன் இனிமையை அவனுடைய உள்ளத்தில் அவன் பெற்றுக் கொள்வான் என்று நபி (ஸல்-அம்) அவர்கள் கூறினார்கள்.
நபி (ஸல்-அம்) அவர்கள் கூறியதாக அனஸ் (றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
ஐந்து விடயங்கள் ஒரு நோன்பாளியின் நோன்பை முறித்து விடும்.
01. பொய் கூறுதல்
02. புறம் பேசுதல்
03. கோள் சொல்லுதல்
04. பொய்ச் சத்தியம் செய்தல்
05. இச்சையுடன் பார்த்தல்

02.  அர்த்தமில்லாத பேச்சை விட்டும், பொய்யை விட்டும், புறம் பேசுவதை விட்டும், தீமையை விட்டும், புறக்கணிப்பதை விட்டும், தர்க்கம் புரிவதை விட்டும் நாவைப் பாதுகாத்தல்.
மௌனமாயிருப்பது சிறந்தது. அந்த நாவை அல்லாஹ்வின் திக்ரைக் கொண்டும், அல் குர்ஆனை ஓதுவது கொண்டும் ஈடுபடுத்துதல். இதுவே நாவின் நோன்பாகும்.
சுப்யான் (றழி) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.
புறம் பேசுதல் நோன்பை வீணாக்கி விடும்.
முஜாஹித் (றழி) அவர்கள் கூறியதாக லைத் (றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்
இரண்டு விடயங்கள் நோன்பை வீணாக்கி விடும்.
01. புறம் பேசுதல்
02. பொய் சொல்லுதல்

நபி (ஸல்-அம்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.
நோன்பு என்பது ஒரு கேடயமாகும். உங்களில் ஒருவர் நோன்பாளியாக இருந்தால் கெட்ட வார்த்தைகளைப் பேச வேண்டாம். மடையனாக இருக்க வேண்டாம். ஒரு மனிதன் அவனுடன் சண்டையிட்டால் அல்லது ஏசினால் நான் நோன்பாளி என்று அவன் சொல்லட்டும்.
நபி (ஸல்-அம்) அவர்களின் காலத்தில் இரண்டு பெண்கள் நோன்பு நோற்றார்கள். அவ்விருவரும் மரணித்து விடுவார்கள் என்ற அளவுக்கு அவ்விருவருக்கும் பகலின் இறுதிப் பகுதியில் தாகமும், பசியும் ஏற்பட்டது.
நோன்பை விடுவதற்கு அனுமதி கேட்டு நபி (ஸல்-அம்) அவர்களிடத்தில் அவ்விருவரும் ஒருவரை ஒருவர் அனுப்பி வைத்தார்கள். நபி (ஸல்-அம்) அவர்கள், வந்தவரிடம் ஒரு பாத்திரத்தைக் கொடுத்து நீங்கள் சாப்பிட்டதை இதில் வாந்தி எடுங்கள் என்று அவ்விருவருக்கும் சொல்லுங்கள் என்று கூறினார்கள். அவ்விருவரில் ஒருத்தி கலப்பற்ற இரத்தத்தையும் அதிகமான இறைச்சியையும் வாந்தி எடுத்தாள். மற்றவளும் அதே போன்று வாந்தி எடுத்தாள். இதைப் பார்த்த மக்கள் ஆச்சரியமடைந்தனர்.
நபி (ஸல்-அம்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.
இவ்விருவரும் அல்லாஹுதஆலா இவ்விருவருக்கும் ஹலாலாக்கிய ஒன்றை விட்டும் நோன்பு நோற்றார்கள். அவ்விருவரின் மீதும் ஹறாமாக்கிய ஒன்றின் மீதும் நோன்பைத் திறந்தார்கள். இவ்விருவரில், ஒருத்தி மற்றவளுடன் அமர்ந்து அவ்விருவரும் மக்களைப் பற்றி புறம் பேசுபவர்களாக இருந்தார்கள். இதுவே அவர்களின் இறைச்சியிலிருந்து அவர்கள் சாப்பிட்ட ஒன்றாகும்.
03.  வெறுக்கப் பட்ட ஒன்றை செவிமடுப்பதை விட்டும் கேள்வியைத் தடுத்தல்.
கூறுவது ஹறாமான ஒன்றாகிறது அதை செவிமடுப்பதும் ஹறாமாகும். இதனால்தான் அல்லாஹுதஆலா பின்வரும் வசனத்தில் செவிமடுப்பவனையும், தடுக்கப்பட்டவைகளை சாப்பிடுபவனையும் சமமாகக் கூறியிருக்கிறான்.
அவர்கள் பொய்யையே அதிகம் செவிமடுப்பவர்கள்.    தடுக்கப்பட்டவற்றை அதிகம் சாப்பிடுபவர்கள்.
(அல்மாயிதஹ் : 42)
பாவமான அவர்களின் கூற்றிலிருந்தும், விலக்கப்பட்டவைகளை அவர்கள் சாப்பிடுவதிலிருந்தும் இறைஞானமுடைய மேதைகளும், அறிஞர்களும் அவர்களைத் தடுத்திருக்க வேண்டாமா?
(அல்மாயிதஹ் : 63)
புறம் பேசுகின்ற நேரத்தில் மௌனமாயிருப்பது ஹறாமாகும். அதையே அல்லஹுதஆலா பின்வருமாறு கூறுகின்றான்.
நிச்சயமாக நீங்களும் அவர்களைப் போன்றவர்களே
(அந்நிஸாஉ : 140)
இதனால் தான் நபி (ஸல்-அம்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.
புறம் பேசுபவனும், அதை செவிமடுத்துக் கொண்டிருப்பவனும் பாவத்தில் கூட்டானவர்கள்.
04.  கை, கால் போன்ற ஏனைய உறுப்புக்களை பாவங்களை விட்டும், வெறுக்கப்பட்டவைகளை விட்டும் தடுத்தல்.
நோன்பு திறக்கின்ற நேரத்தில் ஹறாமும், ஹலாலும் கலந்த உணவை சாப்பிடுவதை விட்டும் வயிற்றைத்தடுத்தல். ஹலாலான உணவைத் தடுத்து ஹறாமான உணவில் நோன்பு திறக்கும் போது அதை நோன்பு என்று சொல்லப்படுவதில் எந்த அர்த்தமும் இல்லை இந்த நோன்பாளிக்கு உதாரணம் என்னவெனில் மாளிகையைக் கட்டி கோட்டையை இடிப்பவனைப்போல.
ஹலாலான உணவு என்பது அது அதிகமாகும் போது தீங்கு செய்யும் அதன் வகையைக் கொண்டு அல்ல. நோன்பு என்பது உணவைக் குறைப்பதற்கே ஆகும். ஹறாம் மார்க்கத்தை அழிக்கக் கூடிய ஒரு நஞ்சாகும்.
ஹலால் என்பது ஒரு மருந்தாகும். அதில் குறைவானது பிரயோசனம் செய்யும். அதில் அதிகமானது தீங்கு செய்யும். நோன்பின் நோக்கம் உணவைக் குறைப்பதாகும்.
நபி (ஸல்-அம்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.
எத்தனையோ நோன்பாளிகளின்  நோன்பில் பசியையும், தாகத்தையும் தவிர அவனுக்கு எதுவுமில்லை.
அதுவே ஹறாமின் மீது நோன்பு திறக்கச் செய்கிறது என்றும், அதுவே ஹலாலான உணவைத்தடுக்கிறது என்றும், அதுவே புறம் பேசுவது கொண்டு மனிதர்களின் இறைச்சிகள் மீது நோன்பு திறக்கச் செய்கிறது என்றும், அதுவே பாவங்களிலிருந்து உறுப்புக்களை பாதுகாக்காமல் இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.
05.  வயிறு முழுக்க நிரம்புகின்ற அளவு நோன்பு திறக்கின்ற நேரத்தில் ஹலாலான உணவை அதிகம் சாப்பிடாமல் இருத்தல்.
ஹலாலினால் நிரம்பிய வயிற்றை விட இறைவனுக்கு மிகவும் கோபமான எந்த ஒரு பாத்திரமும் கிடையாது. 
ஒரு நோன்பாளி தனக்கு பகல் வேளையில் தப்பியதை நோன்பு திறக்கின்ற நேரத்தில் அடைந்து கொண்டால், அல்லாஹ்வின் எதிரியை அடக்குதல், இச்சையை உடைத்தெறிதல் போன்ற நோன்பின் பிரயோசனங்கள் எவ்வாறு கிடைக்கும்.
06.     ஒரு நோன்பாளி நோன்பு திறந்ததன் பின்னால் அவனுடைய உள்ளம் பயத்துக்கும், ஆதரவுக்கும் இடையில் தொங்கவிடப்பட்டதாக இருக்கவேண்டும்.
ஏனெனில் இவனுடைய நோன்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு இறைவனுக்கு மிக நெருக்கமானவர்களில் இவன் ஆக்கப்பட்டு விட்டானா என்பது இவனுக்குத் தெரியாது.

அதேபோன்று இவனுடைய நோன்பு ரத்துச் செய்யப்பட்டு இறைவனுக்கு மிகவும் கோபமானவர்களில் இவன் ஆக்கப்பட்டுவிட்டான் என்பதும் இவனுக்குத் தெரியாது. அவன் செய்து முடிக்கின்ற ஒவ்வொரு வணக்கத்தின் இறுதியிலும் அவன் இவ்வாறு இருந்து கொள்ளட்டும்.
அபுல் ஹஸன் இப்னு அபில் ஹஸன் அல் பஸரீ (றழி) அவர்களைத்தொட்டும் அறிவிக்கப்படுகிறது.

ஒரு நாள் அவர்கள் ஒரு கூட்டத்தினருக்கு அருகில் நடந்து சென்றார்கள். அந்நேரம் அவர்கள் சிரித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள்  “நிச்சயமாக அல்லாஹுத்தஆலா றமழான் மாதத்தை சிருஷ்டிகள் தன்னை வழிப்படுவதற்கு முந்திச் செல்லக் கூடிய ஓர் மைதானமாக ஆக்கியிருக்கிறான். ஒரு கூட்டத்தினர் முந்திச் சென்று வெற்றி பெற்று விட்டனர். இன்னுமொரு கூட்டத்தினர் பிந்தினார்கள், அவர்கள் தோல்வி அடைந்து விட்டார்கள்.

முந்திச் சென்றவன் வெற்றி பெற்ற, வீணாக்கியவன் தோல்வியடைந்த இந்த நாளில் விளையாடிக்கொண்டு, சிரித்துக் கொண்டு இருக்கின்றவனைப் பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கின்றது.

அறிந்து கொள்ளுங்கள், மூடி திறக்கப்பட்டுவிட்டால் உபகாரம் செய்பவன் அவன் உபகாரம் செய்வதில் ஈடுபடுவான். தீங்கு செய்பவன் அவன் தீங்கு செய்வதில் ஈடுபடுவான். அதாவது ஏற்றுக் கொள்ளப்பட்டவனின் மகிழ்ச்சி விளையாடுவதை விட்டும் அவனை ஈடுபடுத்திவிடும். மறுக்கப்பட்டவனின் வேதனை அவன் மீது சிரிப்பின் வாசலை அடைக்கும்.

அல் அஹ்னப் இப்னு கைஸ் (றழி) அவர்களிடம் ஒரு நாள் “நீங்கள் வயது முதிர்ந்த ஒரு ஷெய்காக இருக்கிறீர்கள். நோன்பு உங்களை பலவீனப்படுத்திவிடும்”  என்று சொல்லப்பட்டது. அதற்கவர்கள் “நான் அதை நீண்ட பயணத்திற்காக ஆயத்தம் செய்கிறேன். வேதனையின் போது பொறுமை செய்வதை விட அல்லாஹுத்தஆலாவை வழிபடுகின்ற நேரத்தில் பொறுமை செய்வது மிகவும் இலகுவானதாகும்.

(முற்றும்)



தொடர் – 02
அறிவுக்கடல் ஹுஜ்ஜதுல் இஸ்லாம் அல் அல்லாமா முஹம்மத் இப்னு அபீஹாமித் அல் கஸாலீ (றழிஅவர்களின் இஹ்யாஉ உலூமித்தீன் என்ற நூலிலிருந்து
தமிழில் : மௌலவீ MM அப்துல் மஜீத் ’றப்பானீ
விரிவுரையாளர் : றப்பானிய்யஹ் அறபுக் கலாபீடம்.

நோன்பை விடுகின்ற நேரத்தில் அவசியமானவை 04

01.     கழாச் செய்தல்.
02.     தெண்ட குற்றம் வழங்கல்.
03.     பித்யா வழங்கல்.
04.     நோன்பாளி போன்று எஞ்சிய பகலில் தடுத்திருத்தல்.

01.     கழாச் செய்தல்.

ஏதோ ஒரு காரணத்தினால் அல்லது காரணமில்லாமல் நோன்பை விட்ட புத்திசாலியான, பருவ வயதையடைந்த ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கழாச் செய்வது என்பது பொதுவானதாகும்.


ஹைழின் காரணத்தினால் நோன்பை விட்ட ஒரு பெண் அதைக் கழாச் செய்ய வேண்டும். மதம் மாறியவனும் இவ்வாறு கழாச் செய்ய வேண்டும். காபிர், சிறுவன், பைத்தியக் காரன் இவர்கள் கழாச் செய்ய வேண்டிய அவசியமில்லை.

றமழானுடைய நோன்பை கழாச் செய்யும் போது தொடராகச் செய்ய வேண்டும் என்ற நிபந்தனை கிடையாது. அவன் விரும்பிய மாதிரி தனித்தனியாகவோ மொத்தமாகவோ கழாச் செய்யலாம்.

02.     தெண்ட குற்றம் வழங்கல்.

ஒருவன் உடலுறவில் ஈடுபடும் போது மாத்திரம் தெண்ட குற்றம் வழங்குவது அவசியமாகும்.

சுய இன்பம் பெறுதல், சாப்பிடுதல், குடித்தல் போன்ற உடலுறவு தவிர்ந்த எனைய அம்சங்களைக் கொண்டு தெண்ட குற்றம் வழங்குதல் அவசியமாகாது.

தெண்ட குற்றம் என்பது ஒரு அடிமையை உரிமையிடுதல். அதற்கு முடியாவிட்டால் தொடர்ச்சியாக இரண்டு மாதங்கள் நோன்பு நோற்றல். அதற்கும் முடியாவிட்டால் 60 ஏழைகளுக்கு அரைக்கொத்து வீதம் உணவளித்தல்.

03.     பித்யா வழங்குதல்.

பித்யா என்பது கர்ப்பிணி மற்றும் பால் கொடுக்கக் கூடிய தாய் இருவரும் தங்களின் பிள்ளைகளுக்கு ஏதாவது ஏற்பட்டுவிடும் என்பதை பயந்து நோன்பை விட்டால், அந்த நோன்பை கழாச் செய்வதுடன் ஒவ்வொரு நாளைக்கும் அரைக்கொத்து வீதம் ஒரு ஏழைக்கு வழங்குவதாகும்.

வயது முதிர்ந்த ஒருவர் முதுமையின் காரணத்தினால் நோன்பை விட்டால் ஒவ்வொரு நாளைக்கும் அரைக்கொத்து வீதம் ஸதகா கொடுக்க வேண்டும்.

04.     எஞ்சிய பகலில் தடுத்திருத்தல்.

நோன்பை விடுவது கொண்டு மாறு செய்த அல்லது திறக்குறைச்சல் செய்த ஒருவன் எஞ்சிய பகல் முழுக்க நோன்பாளி போன்று தடுத்திருத்தல் அவசியமாகும்.

ஹைழு ஏற்பட்ட ஒரு பெண் சுத்தமடைந்து விட்டால் எஞ்சிய பகலில் தடுத்திருக்க வேண்டும் என்று அவசியம் கிடையாது.

அதே போன்று பிரயாணம் செய்த ஒருவன் நோன்பை விட்ட நிலையில் பிரயாணத்திலிருந்து திரும்பி விட்டால் எஞ்சிய பகலில் தடுத்திருக்க வேண்டும் என்று அவசியம் கிடையாது

சந்தேகத்துக்குரிய நாளில் நீதியான ஒருவன் பிறையைக் கண்டதாக சாட்சி கூறினால் அன்று பகல் முழுக்க தடுத்திருப்பது அவசியமாகும்.

பிரயாணத்திலிருந்து நோன்பு நோற்பது அதை விடுவதை விடச் சிறந்தது. அதற்கு அவன் சக்தி பெறவில்லையாயின் நோன்பை விடலாம்.

நோன்பின் சுன்னத்துக்கள் 06

01.  ஸஹர் செய்வதை பிற்படுத்துதல்.
    02.  தொழுகைக்கு முன்னால் ஈத்தம் பழத்தைக் கொண்டு அல்லது             தண்ணீரைக்     கொண்டு நோன்பு திறப்பதை விரைவு படுத்துதல்.
    03.  பகல் நேரம் சூரியன் நடுமத்தியிலிருந்து நீங்கியதன் பின்னால் பல்         துலக்குவதை விடுதல்.
    04.  றமழான் மாதத்தில் கொடை வழங்குதல்.
   05.  அல் குர்ஆன் ஓதுதல்.
   06.  பிந்திய பத்தில் குறிப்பாக பள்ளிவாயலில் இஃதிகாப் இருத்தல்.

இது நபீ (ஸல்-அம்) அவர்களின் வழமையாகும். பிந்திய பத்து வந்துவிட்டால் விரிப்பை நபீ (ஸல்-அம்) அவர்கள் சுருட்டுவார்கள். சாறனைக் கட்டுவார்கள். இந்த அமலை செய்வதற்காக தானும் முயற்சி செய்து தனது குடும்பத்தையும் முயற்சி செய்ய வைப்பார்கள். ஏனெனில் அதிலேயே லைலதுல் கத்ர் என்ற இரவு உண்டு. பெரும்பாலும் அதன் ஒற்றைப்பட வரக்கூடிய நாளிலேயே அது வரும். ஒற்றைப்பட வரக்கூடிய நாள் என்பது 21, 23, 25, 27 ஐக் குறிக்கும். இந்த இஃதிகாபை தொடராகச் செய்வது மிகச் சிறந்ததாகும்.

ஒருவன் பள்ளிவாயலில் தொடர்ச்சியாக இஃதிகாப் இருப்பதை நேர்ச்சை செய்தால் அவசியமின்றி பள்ளிவாயலில் இருந்து வெளியாகுவது கொண்டு அவன் தொடர்ச்சியாக இருப்பது என்பது விடுபட்டுவிடும்.

அவன் ஒரு வணக்கத்திற்காக அல்லது சாட்சி கூறுவதற்காக அல்லது ஒரு ஜனாஸாவுக்காக அல்லது ஒருவரை சந்திப்பதற்காக அல்லது வுழூவைப் புதுப்பிப்பதற்காக வெளியானாலும் சரியே.

மலம் அல்லது சலம் கழிப்பதற்காக அவன் வெளியானால் தொடர்ச்சியாக இருப்பதென்பது விடுபடாது. அவன் வீட்டில் வுழூச்செய்வது அவனுக்கு ஆகும். வேறு தேவைக்காக அவன் செல்வது கூடாது.

நபீ (ஸல்-அம்) அவர்கள் மலசலம் கழிப்பதற்காக மாத்திரமே வெளியே செல்வார்கள். நடந்த நிலையிலேயே நோயாளியைப் பற்றி விசாரிப்பார்கள்.

இஃதிகாப் இருக்கக் கூடிய ஒருவன் உடலுறவில் ஈடுபடுவதனால் தொடர்ச்சியாக இருப்பதென்பது விடுபட்டு விடும். முத்தமிடுவது கொண்டு அது விடுபடாது.

பள்ளிவாயலில் மணம் பூசுதல், திருமண உடன்படிக்கை செய்தல், சாப்பிடுதல், உறங்குதல், படிக்கத்தில் கை கழுவுதல்  இவற்றைப் பற்றிப் பரவாயில்லை.

இஃதிகாப் இருக்கக் கூடிய ஒருவரின் உடலின் சில பகுதி வெளியாகுதல் கொண்டு தொடர்ச்சியாக இருத்தல் என்பது விடுபடாது. நபீ (ஸல்-அம்) அவர்கள் பள்ளிவாயலில் இருந்து கொண்டு தனது தலையை மாத்திரம் வெளிப்படுத்திக் கொடுப்பார்கள். அன்னை ஆயிஷா (றழி) அவர்கள் அவர்களின் அறையில் இருந்த நிலையில் அந்த தலையை நன்றாக சீவிவிடுவார்கள்.

இஃதிகாப் இருக்கக் கூடிய ஒருவர் மலசலம் கழிப்பதற்காக வெளியில் சென்றால் மீண்டும் பள்ளிவாயலுக்கு வரும் பொழுது நிய்யத்தை மீண்டும் வைத்துக் கொள்வது அவசியமாகும். மொத்தமாக 10 நாட்களுக்கும் நிய்யத் வைத்திருந்தாலும் அந்த நிய்யத்தை புதுப்பிப்பது மிகச் சிந்ததாகும்.


                                               (தொடரும்…)



بسم الله الرحمن الرحيم
தொடர் 01.
 அறிவுக்கடல் ஹுஜ்ஜதுல் இஸ்லாம் அல் அல்லாமா முஹம்மத் இப்னு அபீஹாமித் அல் கஸாலீ (றழி) அவர்களின் இஹ்யாஉ உலூமித்தீன் என்ற நூலிலிருந்து


தமிழில் : மௌலவீ MM அப்துல் மஜீத்றப்பானீ
விரிவுரையாளர் : றப்பானிய்யஹ் அறபுக் கலாபீடம்.

நோன்பின் இரகசியங்கள் என்ற தலைப்பிலிருந்து சில பகுதிகள்.
பொறுமை என்பது ஈமானின் அரைவாசியாகும். நோன்பு என்பது பொறுமையின் அரைவாசியாகும் என்ற நபீ (ஸல்-அம்) அவர்களின் சொற்படி நோன்பு என்பது ஈமானின் நான்கில் ஒரு பகுதியாகும்.


நபீ (ஸல்-அம்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.
எனது உயிர் யாருடைய கையில் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக நோன்பாளியின் வாயிலிருந்து வரக்கூடிய வாடை கஸ்தூரி வாடையை விட இறைவனிடத்தில் மிக மணமானது.

அல்லாஹுத்தஆலா பின்வருமாறு கூறுகின்றான்.
அவன் (நோன்பாளி) எனக்காகவே தனது மனோ இச்சையையும், தனது உணவையும், தனது குடிப்பையும் விடுகின்றான். நோன்பு என்பது எனக்குரியது அதைக்கொண்டு நானே கூலி வழங்குகிறேன். அல்லது நானே கூலியாக வழங்கப்படுகிறேன்.

நபீ (ஸல்-அம்) அவர்கள் இன்னும் சொன்னார்கள்
சுவர்க்கத்துக்கு ஒரு கதவு உண்டு. அதற்கு அர்றையான் என்று சொல்லப்படும். நோன்பாளிகள் மாத்திரமே அந்தக் கதவினால் நுழைவர்.
நபீ (ஸல்-அம்) அவர்கள் இன்னும் சொன்னார்கள்
நோன்பாளிக்கு இரண்டு சந்தோசங்கள் உள்ளன. நோன்பு திறக்கும் போது ஒரு சந்தோசம். தனது இறைவனை சந்திக்கும் போது ஒரு சந்தோசம்.

நபீ (ஸல்-அம்) அவர்கள் இன்னும் சொன்னார்கள்
ஒவ்வொரு விடயத்துக்கும் கதவு உண்டு வணக்கத்தின் கதவு நோன்பாகும்.
நபீ (ஸல்-அம்) அவர்கள் இன்னும் சொன்னார்கள்
 நோன்பாளியின் உறக்கம் வணக்கம்.

நபீ (ஸல்-அம்) அவர்கள் கூறியதாக அபூஹுறைறா (றழி) அவர்கள் கூறினார்கள்.
றமழான் மாதம் வந்துவிட்டால் சுவர்க்கத்தின் கதவுகள் திறக்கப்பபடுகின்றன. நரகத்தின் கதவுகள் மூடப்படுகின்றன. ஷெய்த்தான்கள் விலங்கிலிடப்படுகின்றார்கள். நன்மையைத் தேடுபவனே விரைந்து வா, தீமையைத் தேடுபவனே நீ சுருக்கிக்கொள் என்று ஒருவன் அழைப்பான்.

நிச்சயமாக வணக்கசாலியான இளைஞனைக் கொண்டு தனது அமரர்களிடம் அல்லாஹ் பெருமை பேசுகின்றான். எனக்காக தனது இச்சையை விட்ட வாலிபனே! எனக்காக தனது வாலிபத்தை செலவு செய்தவனே! நீ எனது மலக்குகளில் ஒருவர் போன்ற எனது அடிமை என்று அல்லாஹ் கூறுகின்றான். என்று நபீ (ஸல்-அம்) அவர்கள் கூறினார்கள்

எனது அமரர்களே! எனது அடிமையைப் பாருங்கள். தனது இச்சையையும், தனது இன்பத்தையும், தனது உணவையும், தனது பானத்தையும் எனக்காகவே விட்டான் என்று அல்லாஹுத்தஆலா கூறுவதாக நோன்பாளி பற்றி நபீ (ஸல்-அம்) அவர்கள் கூறினார்கள்.

நோன்பின் வாஜிபுகள் 06.

1.   றமழான் மாத்தின் முதலாவது தினத்தை கண்காணித்தல். அது பிறையைக் காண்பது கொண்டாகும். பிறை தென்படவில்லை எனில் ஷஃபான் மாதத்தை 30 தினங்களாக பூரணப்படுத்த வேண்டும். நாங்கள் காணுதல் என்று கூறுவது அறிவதையாகும். நீதியுள்ள ஒருவன் சொல்வது கொண்டு அது உண்டாகும். ஆனால் ஷவ்வால் மாதத்தின் பிறை நீதியான இருவர் சொல்வது கொண்டே தரிபடும்.

நீதியுள்ள ஒருவன் பிறை தென்பட்டதாகக் கூறுகின்றான். அவனுடைய சொல்லை இவன் நம்புகின்றான். இவனுடைய எண்ணத்தில் அவன் சொல்வது உண்மை என்ற எண்ணம் மிகைக்குமானால் இவன் மீது நோன்பு நோற்பது அவசியமாகிறது. ஊரின் காழீ அதைக்கொண்டு தீர்ப்புச் செய்யவில்லையாயினும் சரியே.

2.   ஒவ்வொரு இரவும் உறுதியான குறிப்பாக்கப்பட்ட நிய்யத் வைப்பது அவசியமாகும். றமழான் மாதம் முழுவதும் தான் நோன்பு நோற்பதாக ஒரே தடவையில் ஒருவன் நிய்யத் வைத்தால் அது போதாது. இதையே ஒவ்வொரு இரவும் நிய்யத் வைக்கவேண்டும் என்று நாங்கள் கூறினோம்.

பகல் நேரத்தில் ஒருவன் நிய்யத் வைத்தால் றமழானுடைய நோன்பின் கூலியோ, வேறு பர்ழான நோன்பின் கூலியோ இவனுக்குக் கிடைக்காது. மாறாக அது சுன்னத்தான நோன்பாக மாறிவிடும்.

பொதுவாக நோன்பை அல்லது பர்ழை அவன் நிய்யத் வைத்தால் அவனுக்கு பர்ழுடைய கூலி கிடைக்காது. மாறாக றமழான் மாதம் நோன்பு நோற்பதை அல்லாஹ்வுக்காக பர்ழை நிறைவேற்றுவதை அவன் நிய்யத் வைக்க வேண்டும்.

நாளை றமழானாக இருந்தால் நாளை நோன்பு நோற்பதாக ஒருவன் ஷக்குடைய (சந்தேகத்துக்குரிய) இரவில் நிய்யத் வைத்தால் அவனுக்கு அதன் கூலி கிடைக்காது. ஏனெனில் அது உறுதியானது அல்ல.

3.   நோன்பை நினைவு கூர்ந்த நிலையில் மனமுரண்டாக உள்ளே ஓர் வஸ்த்துவை சேர்ப்பதை விட்டும் தடுத்திருத்தல்.

ஒருவன் சாப்பிடுவது கொண்டும், குடிப்பது கொண்டும், மூக்கினுள் விடப்படக் கூடிய மருந்தைக் கொண்டும் அவனுடைய நோன்பு வீணாகிவிடும்.

4.   உடலுறவில் ஈடுபடுவதை விட்டும் தடுத்திருத்தல். ஒருவன் தான் நோன்பாளி என்பதை மறந்த நிலையில் உடலுறவில் ஈடுபட்டால் அவனுடைய நோன்பு முறியாது.

இன்னும் இரவில் அவன் உடலுறவில் ஈடுபட்டால் அல்லது கனவில் அவனுக்கு நுத்பஹ் (இந்திரியம்) வெளியானால் அவனுடைய நோன்பு முறியாது.

ஒருவன் தனது மனைவியுடன் கலந்த நிலையில் ஃபஜ்ர் உதயமாகிவிட்டால் உடனே அவன் அதிலிருந்து விலகிவிட்டால் அவனுடைய நோன்பு சரியானதாக ஆகிவிடும். மாறாக தொடர்ந்தும் உடலுறவில் ஈடுபட்டால் அவனுடைய நோன்பு வீணாகிவிடும். அவன் தெண்டகுற்றம் கொடுப்பதும் அவனுக்கு அவசியமாகிவிடும்.

5.   சுய இன்பம் பெறுவதை விட்டும் தடுத்திருத்தல். ஒருவன் தான் விரும்பிய நிலையில் உடலுறவில் ஈடுபடுவது கொண்டோ அல்லது அதில் ஈடுபடாமலோ நுத்பஹ்வை வெளிப்படுத்தினால் அது அவனுடைய நோன்பை முறித்துவிடும்.

தனது மனைவியை முத்தமிடுவது கொண்டோ அல்லது அவளில் சாய்வது கொண்டோ நோன்பு முறியாது. ஆனால் அதன் மூலம் இவனுக்கு நுத்பஹ் வெளியாகக் கூடாது.

ஒருவன் முத்தமிடுவதை பற்றி பரவாயில்லை ஆனால் அதை விடுவதே மிகச்சிறந்தது. தான் முத்தமிடுவதால் தனக்கு நுத்பஹ் வெளியாகிவிடும் என்பதை பயந்தவனாக இவன் முத்தமிட்டால், நுத்பஹ்வும் இவனுக்கு வந்துவிட்டால் இவன் திறக்குறைச்சல் செய்த காரணத்தினால் இவனுடைய நோன்பு முறிந்து விடும்

6.   வாந்தியை வெளிப்படுத்துவதை விட்டும் தடுத்திருத்தல். ஒருவன் தானாக வாந்தியை வெளிப்படுத்துவது நோன்பை முறித்து விடும். ஆனால் அவனை அறியாமல் அவனுக்கு வாந்தி வந்துவிட்டால் அவனுடைய நோன்பு முறியாது.

ஒருவன் தனது தொண்டையில் அல்லது தனது நெஞ்சில் இருக்கின்ற சளியை விழுங்கிவிட்டால் அவனுடைய நோன்பு முறிந்துவிடாது. இது தவிர்க்க முடியாத ஒன்று என்ற சலுகையின் அடிப்படையிலாகும். ஆனால் தனது வாயினுள் சளி வந்த பின் அதை அவன் விழுங்கினால் அவனுடைய நோன்பு முறிந்துவிடும்.


(தொடரும்….)