Aug 25, 2013

சகாத் பற்றி ஓர் ஆய்வு

தொடர் - 02...

சங்கைக்குரிய ஷெய்குனா மௌலவி 
அல்ஹாஜ் A. அப்துர்றஊப் (மிஸ்பாஹீ) அவர்கள்-

விபரம்

1. சகாத் பெறத் தகுதியானவர்கள் குறைவாகவும் சகாத் பொருள் அதிகமாகவும் இருந்தால் தகுதியுள்ள அனைவருக்கும் சகாத் வழங்க வேண்டும். சகாத் பொருள் குறைவாக இருந்தால் சகாத் பெறத் தகுதியான ஆறு பிரிவினரில் ஒவ்வொரு பிரிவிலும் குறைந்தது மூன்று நபர்களுக்காவது கட்டாயமாக்க கொடுத்தாக வேண்டும். இவ்வாறு கொடுப்பதற்காக சகாத் பொருளை ஆறு சம பங்குகளாகப் பங்கீடு செய்வது அவசியமாகும். ஆனால் ஒவ்வொரு பிரிவிலும் வழங்கப்படும் மூன்று நபர்களுக்கிடையில் சம பங்கீடு அவசியமில்லை.

2. ஏதாவது ஒரு பிரிவினர் முற்றிலும் இல்லாதபோதும் அல்லது மூன்று நபர்களை விடக் குறைவாக இருக்கும்போது இப்பிரிவினருக்காக ஒதுக்கப்பட்ட தொகையை வேறு பிரிவினர்களுக்கு அல்லது அவர்களிலேயே மீதமுள்ளவர்களுக்குக் கொடுக்கலாம்.

3. உடை​மைகள் இருக்கும் ஊர்களிலேயே சகாத் வழங்கவேண்டும். அவ்வூரை விட்டு வேறு ஊருக்கு சகாத்தைக் கொண்டு செல்லக்கூடாது. அது சகாத் கொடுப்பவனின் சொந்த ஊராக இருப்பினும் சரியே.
4 வியாபாரப் பொருட்களின் சகாத்தை பணமாகவும், தங்கம், வெள்ளி, விவசாயப்பொருட்கள், கால் நடைகள் ஆகியவற்றில் அந்தந்தப் பொருட்களாகவும் மட்டுமே சகாத் வழங்க வேண்டும். இதற்கு மாற்றமாக வழங்கினால் சகாத் நிறைவேறாது.

மேற்கண்ட இந் நான்கு சட்டப்பிரிவுகளிலும் ஷாபிஈ மத்ஹபின் இமாமுக்கும், மற்ற மூன்று மத்ஹபின் இமாம்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதால் அவர்களின் சொற்களைத் தழுவி சகாத் கொடுப்பதில் தவறில்லை. 

5. நபி ஸல் அவர்களின் குடும்பத்தவர்களான ஹாஷிம், முத்தலிப் ஆகியோரின் வழித்தோன்றல்களுக்கும், மற்றும் செல்வந்தர்களுக்கும், காபிர்களுக்கும், குடும்பத்தலைவனால் போதுமான அளவு ஜீவனாம்சம் பெறுபவர்களுக்கும் சகாத் கொடுப்பது கூடாது.கொடுத்தால் நிறைவேறாது.தன் ஆயுட்காலத்திற்குப் போதுமான பொருள் உள்ளவன் அல்லது அன்றாடம்தேவையான போதிய வருவாய் ஈட்டித்தரும் தொழில் உள்ளவன் செல்வந்தன் எனும் பெயர் பெறுவான்.

உறவினர்

மனைவி, மக்கள், மக்களின் வழித்தோன்றல்கள் ஆகியோர்களுக்காகக் குடும்பத்தலைவனும், தாய், தந்தை,தாய் தந்தையின் பெற்றோர் ஆகியோருக்காகப் பிள்ளைகளும் ஜீவனாம்சம் கொடுப்பது கடமையாகும். இவர்கள் தவிர உள்ள உறவினன் ஒருவன் மற்றவருக்காக ஜீவனாம்சம் கொடுப்பது மேலதிகமாகும்.கடமையான ஜீவனாம்சம் போதுமானதாக இல்லாவிட்டால் மட்டுமே ஜீவனாம்சம் கொடுப்பவர்கள் தம்மிடம் ஜீவனாம்சம் பெறுபவர்களுக்கு சகாத் கொடுக்கலாம். உதாரணமாக,

1) பெற்றோருக்கு அன்றாடச் செலவுக்கு ஐம்பது ரூபாய் தேவைப்படுகிறது. ஆனால் மகனால் நாற்பது ரூபாய் மட்டுமே கொடுக்க முடிகிறது. இப்போது மகனிடமிருந்து சகாத் பெறலாம்.

2) ஒருவன் தன் சகோதர சகோதரிகளுக்கு அன்றாடம் போதுமான ஜீவனாம்சம் கொடுத்தாலும் தனது சகாத் பணத்தை அவர்களுக்கு சகாத் ஆகவும் கொடுக்கலாம். ஏனெனில் சகோதர சகோதரிகளுக்கு வழங்கப்படுவது மேலதிக ஜீவனாம்சமாகும். 

3) கடமையான ஜீவனாம்சம் போதுமானதாக இருந்தாலும் பகீர் மிஸ்கீன் என்ற காரணம் தவிரவுள்ள வழிப்போக்கன், போராளி, கடனாளி போன்ற மற்றக் காரணங்கள் கொண்டு ஜீவனாம்சம் கொடுப்பவர்களிடமிருந்தேசகாத் பெறலாம்.

4) மனைவிக்கு கணவன் ஜீவனாமசம் கொடுப்பதோடு கணவன் ஏழையாகவும், மனைவி செல்வமுள்ளவளாகவும் இருநதால் மனைவி தன் சகாத் பொருளை கணவனுக்குக் கொடுக்கலாம். இவ்வாறு கொடுப்பது ஸுன்னத்துமாகும். பாவிகளுக்க சகாத் கொடுத்தால்கடமை நிறைவேறும். ஆயினும் சகாத் பொருளை அவர்கள் பாவத்துக்காகப் பயன்படுத்துவார்கள் என்று உறுதியாகத்தெரிந்தால் பாவிக்கு சகாத் கொடுப்பது ஹறாமாகும்.

உத்தேச மதிப்பீடு

சகாத் வழங்கும் விடயத்தில் உத்தேச மதிப்பீடு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. ஒருவன். தனது பொருளாதாரத்தை இஸ்லாம் கூறியுள்ள முறைப்படி கணக்கிட்டு சகாத் வழங்க வேண்டும். ஒருவன் சரியாகக் கணக்கிடாமல் தனது பொருளாதாரம் பத்து இலட்சம் இருக்கலாம் அல்லது இருபது இலட்சம் இருக்கலாமென்று உத்தேச மதிப்பீடு செய்து சகாத் வழங்கினால் அது சகாத் ஆகமாட்டாது. செல்வந்தர்களிற் பலர் இவ்வாறு செய்தாலும் இது பிழையானதே.

நிய்யத்

சகாத் கொடுக்கும்போது மனதில் நிய்யத் செய்வது கடமையாகும். வாயால் மொழிவது அவசியமில்லை. “இது என் சகாத் பொருளாகும்” என்றோ “என் மீது கடமையான தர்மம்” என்றோ, “என் பொருளின் மீது கடமையான தர்மம்” என்றோ நிய்யத் செய்து கொள்ளுதல் வேண்டும்.

சகாதுல் பித்ரி. 

நோன்புப் பெருனாளன்று கொடுக்கப்படும் தானியக் கொடைக்குஇச் சொல் பயன்படுத்தப்படுகின்றது. நோன்பு கடமையாக்கப்பட்ட ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டிலேயே இதுவும் கடமையாக்கப்பட்டது.

ஒரு முஸ்லிம் தனக்காகவும், தான் ஜீவனாம்சம் கொடுக்கவேண்டியவர்களுக்காகவும், பெருநாள் பகல் மற்றும் இரவு உணவுக்கும் குடும்பச் செலவுக்கும்,செலுத்தவேண்டிய கடன் தொகைக்கும் ஏற்பாடுசெய்த பின் அவரிடம் பொருள் வசதி இருந்தால் தனக்காகவும் தான் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டியவர்களுக்காகவும் “சகாதுல் பித்ரி”கொடுப்பது​அவர் மீது கடமையாகும். 

நோன்பின் இறுதி வரை வறியவனாயிருந்து பெருநாள் இரவுதான் அவனுக்கு வசதிவாய்ப்பு ஏற்படுகின்றதென்றால் அவன் மீதும் “சகாதுல் பித்ரி” கடமையாகும்.

இதுபோன்றே பெருநாள் இரவு பிறந்த பிள்ளைக்கும் அன்றிரவு மணமுடித்த மனைவிக்கும் சகாதுல் பித்ரி கொடுப்பது கடமையாகும்.ஒரு நபருக்கு இரண்டேகால் கிலோ ,அல்லது ஒன்றரை பக்கா அல்லது மூன்று லீட்டர் அளவுள்ள புழக்கத்தில் புரதான உணவாகக் கொள்ளும் தானியத்தை வழங்கவேண்டும்.

ஒருவர் தனக்காக சகாதுல் பித்ரி வழங்கும் போது தான் இருக்கும் ஊரிலுள்ள ஏழைகளுக்கும், மனைவி மக்கள் மற்றும் பெற்றோர்களுக்காக வழங்கும் போது அவர்கள் இருக்கும் ஊரிலுள்ள ஏழைகளுக்கும் அந்த ஊரில் பிரதான உணவாகக்கொள்ளும் தானியத்திலிருந்து கொடுக்க வேண்டும். தானியங்களின் கிரயத்தையோ,கொடுக்கப்படும் ஊரிலுள்ள பிரதானமில்லாத தானியங்களையோ, வண்டு, புளு, அரித்த தானியங்களையோகொடுப்பது கூடாது. கடைசி நோன்பின் மக்ரிப் முதல் பெருநாள் தொழுகையை நிறைவேற்றும் வரை “சகாதுல் பித்ரி”

கொடுப்பதற்கான காலமாகும்

பெருநாள் தொழுகைக்குப் பின் காலம் தாழ்த்துவது “மகரூஹ்” ஆகும். ரமழான் மாத தொடக்கத்திலிருந்து கொடுப்பது கூடும். பெருநாளுக்குப்பின் பிற்படுத்துவது ஹறாம் ஆகும். அண்டை வீட்டுக்காரரோ, உறவினரோ சகாதுல் பித்ரி கொடுக்கும் சமயம் அங்கில்லாதிருந்தால் அன்றைய மாலை சூரியன் மறையும் வரை அவருக்காக அதனை ஒதுக்கிவைத்திருந்து கொடுப்பது சுன்னத்தாகும். 

கவனிக்கப்படவேண்டிய பங்காளர்கள்

பள்ளிவாயல்களின் பேஷ் இமாம்கள், முஅத்தின்கள், மௌலவிமார்கள், அறபுக்கல்லூரியின் ஹழ்ரத்மார்கள்,அரச ஊழியர்கள் ஆகியோர் சகாத் விடயத்தில் கவனிக்கப்பட வேண்டியவர்களாவர்.மேற்கண்ட இவர்களில் ஒரு சிலர் தவிர மற்றவர்கள் யாவரும் பகீர் அல்லது மிஸ்கீன் பிரிவைச் சேர்ந்தவர்களாகவே இருக்கின்றார்கள். ஆகவே சகாத் வழங்குவோர் இவர்களையும் கவனத்திற்கொள்வது அவசியம்.



தொடர்- 01
சங்கைக்குரிய ஷெய்குனா மௌலவி 
அல்ஹாஜ் A.அப்துர்றஊப் (மிஸ்பாஹீ) அவர்கள்-

இஸ்லாம் மார்க்கத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மத்ஹப்கள் நான்கு உள்ளன. அவை ஷாபிஈ மத்ஹப் ,ஹனபீமத்ஹப் ,ஹன்பலீமத்ஹப் மாலிக்மத்ஹப் என்ற பெயரால் அழைக்கப்படும்.

ஒரு முஸ்லிம் எந்த் நாட்டில் வாழ்ந்தாலும் எந்த மொழி பேசினாலும் மேற்கண்ட நான்கு மத்ஹப்களில் ஒன்றைத் தழுவியே அவனது வணக்க வழிபாடுகளைச் செய்தல்வேண்டும்.

வஹ்ஹாபிகள் மத்ஹப்கள் தேவையில்லை என்று வாதிடுபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது 

முஸ்லிம்களில் அநேகர் சகாத் தொடர்பான விபரங்களைஅறிந்து கொள்ளாமல் தாம் விரும்பியவாறு சகாத் கொடுத்துவருகின்றார்கள். அத்தகையோர்விபரமறிந்து செயல்படவேண்டுமென்பதற்காக சகாத் பற்றி ஓர் ஆய்வு என்ற தலைப்பில் ஷாபிஈ மத்ஹபைத் தழுவி அது தொடர்பான பிரதான சட்டங்களை மட்டும் இங்கு குறிப்பிட்டுள்ளேன். மேலதிக விபரம் தேவையானோர் சட்டக்லை நிபுணர்களை அணுகி அறிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். சட்ட மேதைகளில் யாராவது இதில் பிழை இருக்கக்கண்டால் எனக்குச்சுட்டிக்காட்டுமாறு அவர்களை அன்பாய்க் கேட்டுக்கொள்கிறேன்.
சகாத் என்பது இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று.இதன் பொருள்

வளர்தல், தூய்மைப்படுத்துதல் என்பதாகும். ஏழைவரி என்று இதற்குப்பொருள் கூறுதல் பிழை.

ஒருவன் தன் உடமைகளிலிருந்து சகாத்துக்குரிய அளவை ஏழைகளுக்குகொடுப்பதன் மூலம் அவன் பாவத்திலிருந்தும், உலோபித்தனத்திலிருந்தும் தூய்மைபெறுகின்றான். சகாத்தை நிறவேற்றிய பறகத்தாலும் அதைப் பெற்றவர்களின் துஆ பிரார்த்தனையாலும் கொடுத்தவரின் பொருட்கள் மேலும் வளர்கின்றன. இதனால்தான் இதற்கு இப்பெயர் ஏற்பட்டது.

சகாத்ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு கமையாக்கப்பட்டது. 

நபியே அவர்களின் செல்வத்திலிருந்து தருமத்திற்கானதை எடுத்துக்கொண்டு அதனால் அவர்களை உள்ளும் புறமும் தூய்மையாக்குவீராக.
திருக்குர்ஆன் 9-103

தொழுகையை நிறைவேற்றுங்கள்.சகாத் கொடுங்கள் என்று அல்லாஹ் திரு மறையில் பல இடங்களில் தொழுகையுடன் இணைத்தே கூறியுள்ளான் இதிலிருந்து சகாத்தின் முக்கியத்துவம் தெளிவாகின்றது.

சகாத் கடமை என்பதைக் குறிக்கும் திருமறை வசனங்களும், நபீ மொழிகளும், இமாம்களின் இஜ்மாவும் இருப்பதோடு அனைவராலும்​வெளிப்படையாக அறியப்பட்ட கடமையாகவும் சகாத் இருக்கின்றது. சந்தர்ப்பத்திற்கேற்றவாறு சட்டத்தை மாற்றியமைக்கும் வஹ்ஹாபிகள் கூட சகாத் கடமை என்பதை இதுவரை மறுக்க முன்வரவில்லை,அவர்களின் புதிய கொம்பியூட்டர் கண்டுபிடிப்பு இதன்பிறகு என்ன சொல்லுமோ தெரியவில்லை.

எனவே, சகாத் கடமையான ஒருவன் தன்மீது அது கடமையில்லை என்று மனமுரண்டாக மறுத்தால் அவன் “காபிர்” ஆகிவிடுவான்.

சகாத் எதில் கடமை?

தங்கம்,வெள்ளி சேமித்து வைத்து உண்ணப்படும் உணவுப்பொருட்கள், திராட்சை பேரீத்தம்பழம் ஆகிய இரு வகைப்பழங்கள், வியாபாரப்பொருட்கள்,ஆடு,மாடு,ஒட்டகம் ஆகிய மூவகைக் கால் நடைகள் 

முதலியவை மீது மட்டுமே சகாத் கடமையாகும்.

யார் மீது கடமை?

ஒருவன் முஸ்லிமாகவும் புத்தி சுவாதீனமுள்ளவனாகவும் வயது வந்தவனாகவும், சுதந்திரமுள்ளவனாகவும், பொருட்களின் மீது அதிகாரம் உள்ளவனாகவும் இருப்பதோடு “சகாத்” கடமையாவதற்குரிய அளவுள்ள அவனின் பொருட்கள் அவனிடம் ஒரு வருடகாலம் இருந்தால் அவன் மீது சகாத் கடமையாகும். எனினும் மேற்கண்ட பொருட்களின் உரிமையாளனாக

சிறுவனோ புத்தி சுவாதீனமற்றவனோ இருந்தால் இவர்களைப் பராமரிப்பவர்கள் இவர்களின் பொருட்களிலிருந்து சகாத் கொடுக்க வேண்டும்.

யாருக்கு சகாத்?

சகாத் என்பது “பகீர்” களுக்கும், மிஸ்கீன்களுக்கும், சகாத் வசூலிப்பவர்களுக்கும், புதிதாக இஸ்லாத்தை தழுவியவர்களுக்கும்,அடிமைகளை விடுதலை செய்வதற்கும், கடனில் மூழ்கியிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் போர் செய்பவர்களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் உரித்தானதாக அல்லாஹ் ஏற்படுத்தியகடமையாகும்.அல்லாஹ் யாவையும் அறிந்தோனும், ஞானமுடையோனுமாயுள்ளான்.
திருக்குர்ஆன் 9-60

இந்த வசனத்தில் சகாத் பெறத்தகுதியான எட்டுப் பிரிவினரை அல்லாஹ் கூறியுள்ளான்.இவர்களில் அடிமைகள்,மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாளும் இமாம்களால் நியமிக்கப்படுகின்ற சகாத் வசூலகர்கள் ஆகிய இரு பிரிவினரும் தற்காலத்தில் இல்லாததால் இவர்கள் தவிரவுள்ள மற்ற ஆறு பிரிவினருக்கும் சகாத் வழங்குவது கடமையாகும். இந்த ஆறு வகையினர் அல்லாத வேறு நபர்களுக்கு வழங்கினால் சகாத் நிறைவேறாது.

பகீர்- மிஸ்கீன்

அறவேபொருள் இல்லாதவனும், தனக்கும், தான் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டியவர்களுக்கும் வருவாய் தருகின்ற ஹலாலான சம்பாத்தியம் இல்லாதவனும் பகீர் ஆவார்கள், இதன்படி ஒருவனுக்கு ஹறாமான வருவாய் தேவைக்கதிகமாக இருந்தாலும் அவனும் பகீரேதான்.

ஹலாலான சம்பாத்தியம் இருந்தும் போதிய வருவாய் இல்லாத ஒருவன் “மிஸ்கீன்” ஆவான்,

ஒருவனுக்கும் விசாலமான வீடு, பணியாட்கள்,உயர்தர ஆடைகள்தேவையான நூல்கள் அல்லது பெண்களுக்குத்தேவையான நகைகள் ஆதியன இருப்பதோடு அவனின் அன்றாடச் செலவுக்குச் சிரமப்பட்டால்அவனும் பகீர் அல்லது மிஸ்கீன் என்ற பெயர்பெற்றுசகாத் பெறுவதற்குத் தகுதியுடையவனாகின்றான். இதுபோன்றே ஒருவன் வியாபாரத்தில் அல்லது விவசாயத்தில், கால் நடைவளர்ப்பில் ஈடுபட்டு சகாத் கொடுக்கும் அளவுக்கு அவனின் வருவாய் இருந்தாலும் அவனுக்கும் அவனது குடும்பத்திற்கும் அன்றாடச் செலவுக்குப்போதுமான வருவாய் இல்லாவிட்டால் அவனும் சகாத் பெறத் தகுதியானவனாகின்றான்.இந்த அடிப்படையில் ஆயிரம் பொற்காசுகொண்டு வியபாரம் செய்யும் ஒருவன் சகாத் பெறுவதற்கு தகுதியுள்ளவனாகவும், கோடாலியும் கயிறுமே உடமையுள்ள போதிய வருயாயுள்ள விறகுவெட்டி சகாத் பெற தகதியற்றவனாகவும் ஆகிவிடுகின்றான், என இமாம் கஸ்ஸாலி(றஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்

ஹலாலான தொழில் இருந்தும் அதில் ஈடுபடாமல் மார்க்கக் கல்வியை கற்பவர்களுக்கு சகாத் வழங்கலாம் மார்க்கக் கல்வி கற்கும் மாணவர்கள் இதில் அடங்குவர். ஆனால் தொழிலில் ஈடுபடாது மேலதிக வணக்கங்களில் ஈடுபடும் ஆபித் வணக்கசாலிகளுக்கு சகாத் வழங்குவது கூடாது. ஏனெனில் கல்வி கற்பது கடமையாகும். மேலதிக வணக்கங்களோ அவரவர் விருப்பத்திற்குரியவையாகும்.

கடன்

ஒருவன் தனக்காகவும், தன் குடும்பத்தின் ஹலாலான செலவினங்களுக்காகவும் கடன் வாங்கினான். அவனால் கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாத போது அவன் சகாத் பெறத் தகுதியுடையவனாகின்றான்.

பள்ளிவாயல்கள் மற்றும் கல்விக்கூடங்கள் கட்டுதல் போன்ற பொதுச்சேவைக்காகவும்,ஏழைகளின் திருமணம் நடத்தி வைத்தல், இருவருக்கிடையில் சமாதானம் செய்தல் போன்ற சமூகசேவைக்காகவும், கைதிகளை விடுவித்தல்,கடன்பெற்றவருக்காக பிணை நிற்குதல் போன்ற நற் சேவைக்காகவும் கடன்பட்டவர்கள், அவர்கள் செல்வந்தர்களாயிருந்தாலும் இக்கடன்களை திருப்பிச் செலுத்த சகாத் பெற்றுக்கொள்ளலாம். ஆனால் செல்வந்தன் தனது செல்வத்திலிருந்தே இவ்வாறு செலவு செய்திருந்தால்அதற்காக சகாத் பெறுவது கூடாது.

பள்ளிவாயல்கள் மற்றும் கல்விக்கூடங்கள்போன்ற பொது நலத்தொண்டுக்காக கடன் பெற்றிருந்தால் மட்டும் கடன் நிவாரணமாக சகாத் பெற முடியும். உதாரணமாக கட்டடப் பொருட்களை கடனாக வாங்குவதுபோலும் கட்டடத்தொழிலாளர்களுக்கு கடனாகப் பணம் வாங்கிக் கொடுப்பது போலும். இந்தக் கடன் நிவாரணமாக சகாத் பெறமுடியும். ஆனால் சகாத் பணம் திரட்டி இவைகளைக் கட்டுவது கூடாது.

கைதி விடுதலைக்காக மற்றும் கடன் பட்டவனுக்காக பொறுப்பேற்றல் போன்ற நற்பணிகளில் கைதியும் கடன் பெற்றவனும்பொறுப்பேற்ற தொகையை வழங்குவற்குரிய செல்வந்தர்களாயிருந்தால் இதற்காக சகாத் பெறுவது கூடாது. கடன் கொடுத்த செல்வந்தன் கடன் பெற்ற ஏழையிடம் கொடுத்த கடனைவாங்கி அதை அவனுக்கே திரும்பவும் சகாத் ஆகக் கொடுக்கலாம். திருப்பி வாங்காமல் “கடன் தொகையை சகாத் பணமாக வைத்துக்கொள்” என்று கூறினாலோ, “இப்போதுநான் தரும் சகாத் பணம் கொண்டு என் கடனைத் திருப்பித் தா” என்ற நிபந்தனையுடன் சகாத் வழங்கினாலோ சகாத் நிறைவேறாது.

போராளிகள்

போரில் பெறும் இலாப நஷ்டங்களைக் கருதாமலும்,போராளியாக அரசிடம் பதிவு செய்துகொள்ளாமலும் அல்லாஹ்வுக்காகபோர் புரியும்போராளிகள் பயணச்செலவுக்காகவும் அவர்களின் குடும்பச்செலவுக்காகவும், யுத்த தளவாடங்கள் வாங்குவதற்காகவும் சகாத் வழங்கவேண்டும்.

வழிப்போக்கர்கள்

சகாத் வழங்கும் ஊரைக்கடந்துசெல்லும் பயணிகள் அல்லது அந்த ஊரில் இருந்து பயணம் புறப்பட விரும்பும் பயணிகள் ஆகயோர் வழிப்போக்கர்கள் ஆவர். பயணியின் நோக்கம் சுற்றுலாவாக இருப்பினும் சகாத் வழங்கலாம். எனினும் பயணத்துக்கான பணம் இல்லாதிருத்தல், அந்த பயணம் பாவத்திற்கான பயணமாக இல்லாதிருத்தல் இரண்டும் அவசியம்.

புதிய முஸ்லிம்

இவர்கள் நம்மிடம் உதவியை எதிர்பார்த்தால் அல்லது இவர்களுக்கு சகாத் வழங்குவதால் இவர்களின் சமூகத்தை சேர்ந்த மற்றவர்களும் இஸ்லாமின் பால் ஈர்க்கப்படுவர்கள் என்றநோக்கம் இருந்தால் இவர்களுக்கும் சகாத் வழங்கலாம்.
தொடரும்........