Feb 29, 2012

துஆ பயனளிக்க சில ஒழுக்கங்கள்

-மௌலவீ.AHM.குறைஷ் (றப்பானீ)-

அல்லாஹுத்தஆலா தன் திருமறையில் கூறும் பொழுது ‘நீங்கள் என்னை அழைத்துப் பிரார்த்திய்யுங்கள் நான் உங்களுடைய பிரார்த்தனைக்கு பதிலளிப்​பேன்” என்று கூறுகின்றான் (40:60). பெருமானார் நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அல்லாஹ்விடம் துஆ கேட்காமலிருந்து விடும் போது அல்லாஹ் கோபிக்கின்றான் என்று சொன்னார்கள் (திர்மிதீ 5/126, -3433-மிஷ்காத்2238) மேற்சொல்லப்பட்ட திருமறை வசனத்திலிருந்தும் திரு நபீமொழியிலிருந்தும் அல்லாஹ்விடம் துஆ கேட்கும்போது அந்த துஆ பயனளிக்க சில ஒழுக்கங்கள் பின்வருமாறு.​

1) ஹலாலான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

2) அல்லாஹ் நாடினால் நமது துஆவினை ஏற்பான் என்ற விசுவாசம்               வேண்டும்.

3) உள்ளச்சத்துடனும் மனவோர்மையுடனும் பிரார்த்திக்க வேண்டும்.

4) பாவமான விஷயங்களிலும் குடும்ப உறவில் பகைமை ஏற்படுவதிலும் அடுத்தவரின் உரிமைகளில் பங்கம் ஏற்படுவதிலும் பிரார்த்திப்பது கூடாது.

5) நடைபெறுவதற்கு சாத்தியமில்லாத ஒன்றினை துஆவாக கேட்பது கூடாது.

6) நல்ல நேரங்கள், இடங்களில் பிரார்த்தனை செய்வதும் சிறந்தது..

(உ+ம்) சுஜூது செய்யும் போது, பாங்கு இகாமத்திற்கு இடைப்பட்ட நேரத்தின்​ போது.

7) பாவம் செய்திருந்தால் அதற்காக மனம் வருந்தி தவ்பா செய்த பின்னர் துஆ கேட்க வேண்டும்.

8) வுழூ செய்து தூய்மையான பின்னர் கிப்லாவை முன்​னோக்கியவராக துஆ கேட்க வேண்டும்.

9) துஆவினை துவங்கும் போதும் முடிக்கும் போதும் அல்லாஹ்வின் ஹம்தையும் அண்ணலாரின் ஸலவாத்தையும் ஓதிக்கொள்ள வேண்டும்.