Mar 19, 2014

23 வது வருட ஷெய்குத் தவா ஹகீம் ஷெய்கு தாஊத் வலிய்யுல்லாஹ் அன்னவர்களின் கந்தூரி நிகழ்வுகள்


இந்தியா – தமிழ்நாடு – முத்துப்பேட்டை- ஜாம்புவானோடையில் கொலுவீற்றிருந்து அருள்புரியும் வைத்தியக் கலாநிதி ஷெய்குத் தவா ஹகீம் ஷெய்கு தாஊத் வலிய்யுல்லாஹ் அன்னவர்களின் 23 வது வருட கந்தூரி நிகழ்வுகள் காத்தான்குடி-05, பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் 14.03.2014 – 16.03.2014 வரை தொடர்ச்சியாக 3 தினங்களுக்கு மிக சிறப்பாக நடைபெற்றது.

இதன் முதல் நாள் நிகழ்வுகள் பி.ப. 5.00 மணிக்கு திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி மஜ்லிஸ் மண்டபத்தில் கத்முல் குர்ஆன் ஓதப்பட்டு நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து மௌலித் ஷரீப் நிகழ்வுகளும் இஷாத் தொழுகையின் பின் சங்கைக்குரிய மௌலவீ. HMM. இப்றாஹீம் (நத்வீ) அன்னவர்களினால் ஆத்மீகப் பேருரையும் நிகழ்த்தப்படவுள்ளது.

இரண்டாம் நாளான சனிக்கிழமை பி.ப. 5.00 மணிக்கு ஹாஜாஜீ மஜ்லிஸ் மண்டபத்தில் ஷெய்கு தாஊத் (வலீ) அன்னவர்களின் புகழ்பாடும் மௌலித் மஜ்லிஸ் நிகழ்வுகளுடன் ஆரம்பமாகி மஃரிப் தொழுகையினைத் தொடர்ந்து தலைபாதிஹஹ் மௌலித் நிகழ்வும் அதனைத்தொடர்ந்து இஷாத் தொழுகையின் பின் அதி சங்கைக்குரிய ஷெய்குனா அல்ஹாஜ். மௌலவீ. A. அப்துர் றஊப் (மிஸ்பாஹீ, பஹ்ஜீ) அன்னவர்களினால் ஆத்மீகப் பேருரையும் இடம்பெற்றது.

இறுதி நாள் நிகழ்வுள் பி.ப 5.00 மணிக்கு ஹகீம் ஷெய்கு தாஊத் (வலீ) அன்னவர்களின் பேரிலான மௌலித் ஷரீப் நிகழ்வு இடம்பெற்றது. அத்தோடு எம்மை விட்டும் பிரிந்த மர்ஹும் அஸ்அத் பர்மான் பாஸ் அவர்களின் பேரில் சூறா யாஸீன் ஓதப்பட்டு துஆப் பிரார்த்தனையும் இடம்பெற்றது. மஃரிப் தொழுகையினைத் தொடர்ந்து நபீ புகழ் காப்பியமான கஸீததுல் புர்தா மௌலிதும் இடம்பெற்று இஷாத் தொழுகையினைத் தொடர்ந்து அதி சங்கைக்குரிய ஷெய்குனா அல்ஹாஜ். மௌலவீ. A. அப்துர் றஊப் (மிஸ்பாஹீ, பஹ்ஜீ) அன்னவர்களினால் ஆத்மீகப் பேருரையும் நிகழ்த்தப்பட்டதோடு சங்கைக்குரிய மௌலவீ அல்ஹாஜ். முஸாதிக் (அஸ்ஹரீ) B.A அவர்களினால் பெரிய துஆ ஓதப்பட்டு தபர்றுக் வினியோகத்துடனும் ஸலவாத்துடனும் இனிதே நிறைவுபெற்றது.