Mar 9, 2012

அஷ் ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அரபி (றஹ்) அவர்கள்



பிஸ்மில்லாஹிர் றஹ்மானிர் றஹீம்.

மௌலவீ  MM. அப்துல் மஜீத் றப்பானீ அவர்கள் 
தலைவர் – காதிரிய்யஹ் திருச்சபை, 
விரிவுரையாளர் - றப்பானிய்யஹ் அறபுக் கலாபீடம். 


றபீஉனில் ஆகிர் மாதம் நினைவு கூறப்படக்கூடிய மகான்களில் அஷ்ஷெய்ஹுல் அக்பர், அல் கிப்ரீதுல் அஹ்மர், அல் மிஸ்குல் அத்பர், அந் நூறுல் அப்ஹர் முஹ்யித்தீன் இப்னு அறபீ கத்தஸல்லாஹு ஸிர்றஹுல் அஸீஸ் அன்னவர்கள் மிக விஷேடமானவர்கள். 

இவர்களின் இயற்பெயர் முஹம்மத் இப்னு அலீ என்பதாகும். பின்வருவன அவர்களின் பட்டப் பெயர்களாகும். 
அஷ் ஷெய்ஹுல் அக்பர் – மிகப் பெரிய ஷெய்ஹ் 

அல் மிஸ்குல் அத்பர் – அதிக மணம் நிறைந்த கஸ்தூரி 

அல் கிப்ரீதுல் அஹ்மர் – சிவப்புக் கெந்தகம் அல்லது தங்கம். 

அந்நூறுல் அப்ஹர் – பிரகாசம் நிறைந்த ஒளி 

முஹ்யில் மில்லதி வத்தீன் – மார்க்கத்தை உயிர்ப்பித்தவர் 

சுல்தானுல் ஆரிபீன் – இறைஞானிகளின் அரசர் 

காதிமுல் அவ்லியா – வலீமார்களின் முத்திரை 

இன்னும் பல பட்டப் பெயர்களால் இவர்கள் அழைக்கப்படுகின்றார்கள். அபூபக்கர் என்பது இவர்களின் புனைப்பெயராகும். இவர்கள் ஹிஜ்ரீ 560ம் ஆண்டு றமழான் பிறை 17 திங்கட்கிழமை ஸ்பெய்னிலுள்ள “முர்ஸியா” என்ற நகரில் பிறந்தார்கள். பனூ உமய்யாக்களுடைய காலத்தில் முஸ்லிம்களால் உறுவாக்கப்பட்ட நகரம்தான் இந்த முர்ஸியா என்ற நகரம். 

இவர்களின் தந்தை அலீ இப்னு முஹம்மத் (றழி) அவர்கள் பிக்ஹ், ஹதீஸ், ஸூபிஸம் போன்ற கலைகளில் சிறந்து விளங்கினார்கள். அரச சபையில் ஓர் அமைச்சராகவும் திகழ்ந்தார்கள். இவர்களின் பாட்டன் ஸ்பெயினுள்ள நீதிவான்களில் ஒருவராகவும், பிரசித்தி பெற்ற மார்க்க அறிஞர்களில் ஒருவராகவும் விளங்கினார்கள். இப்னு அறபீ குத்திஸ ஸிர்ருஹூ அன்னவர்களுக்கு பல பதவிகள் வந்தும் அவர்கள் அதை விரும்பவில்லை. 

இப்னு அறபீ குத்திஸ ஸிர்ருஹூ அன்னவர்கள் “தையிஃ” என்ற உயர் வம்சத்தைச் சேர்ந்தவர்களாக விளங்கினார்கள். இந்த வம்சம் கல்வியிலும், மார்க்க ஞானத்திலும் அக்காலத்தில் சிறந்து விளங்கிய ஓர் வம்சமாகும். 

இப்னு அறபீ குத்திஸ ஸிர்ருஹூ அன்னவர்கள் தங்களின் ஏழு வயதில் அல்குர்ஆனை முழுமையாக கற்று முடித்தார்கள். இப்னு அறபீ குத்திஸ ஸிர்ருஹூ அன்னவர்கள் எட்டு வயதை  அடைந்த போது அவர்களின் தந்தை அலீ இப்னு முஹம்மத் அவர்கள் “இஷ்பீலியா” என்ற நகரை வந்தடைந்தார்கள். அந்த நேரத்தில் சுல்தான் இப்னு முஹம்மத் சஃத் என்பவர் ஆட்சி செய்து கொண்டிருந்தார். ஸ்பெயினுள்ள நகரங்களில் “ஸ்பீலியா” அறிவின் தலைநகராக விளங்கியது. இன்னும் அழகிய, மணம் நிறைந்த பூங்காக்கள், இயற்கைக் காட்சிகள் நிறைந்த ஓர் அழகான நகராகவும் விளங்கியது. 

தங்களின் பத்து வயதை அடைந்த போது இப்னு அறபீ அன்னவர்களில் இருந்து தத்துவம் நிறைந்த கருத்துக்கள் வெளியாகின. ஆன்மீக உயர் தத்துவங்களை இப்னு அறபீ குத்திஸ ஸிர்ருஹூ அவர்கள் வெளிப்படுத்தினார்கள். இவை இல்ஹாம் – இறை உதிப்பின் மூலம் வெளியான கருத்துக்களாக காணப்பட்டன. எந்த ஒரு கிரந்தத்திலும் காணப்படாத கருத்துக்களாக காணப்பட்டன. 

உலகில் தோன்றிய ஸூபிகளில் இப்னு அறபீ குத்திஸ ஸிர்ருஹூ அன்னவர்களுக்கு நிகரானவர்கள் யாரும் கிடையாது. அவர்களைப் போன்ற ஸூபி உலகில் இது வரை தோன்றவுமில்லை. தோன்றப் போவதுமில்லை. இறைஞானத் தத்துவங்களை எவருக்கும் அஞ்ஞாமல் பகிரங்கமாகக் கூறினார்கள். ஸூபிஸ வழியின் எதார்த்தங்களை தெளிவாகக் கூறினார்கள். 

சிறந்த ஓர் கவிஞராக விளங்கினார்கள். இப்னு அறபீ குத்திஸ ஸிர்ருஹூ அன்னவர்கள் அரச சபையில் பல பரிசில்களைப் பெற்றிருக்கிறார்கள். “தீவானுஷ் ஷிஃர்” “துர்ஜுமானுல் அஷ்வாக்” போன்ற கிரந்தங்கள் இதற்குச் சான்றாகும். 

இப்னு அறபீ குத்திஸ ஸிர்ருஹூ அன்னவர்கள் அனைத்துக் கலைகளிலும் சிறந்து விளங்கினார்கள். ஹதீஸ், பிக்ஹ், தப்ஸீர், ஸூபிஸம் மற்றும் பல கலைகளில் கிரந்தங்களை இயற்றினார்கள். தத்துவங்கள் அவர்களில் இருந்து ஊற்றெடுத்தன. இவர்களின் தத்துவங்களை புரிந்து கொள்ள, விளங்கிக் கொள்ள முடியாத வெளிரங்க உலமாக்கள் இவர்களைக் காபிர் என்றும், ஸிந்தீக் என்றும் கூறினர். நஊதுபில்லாஹி மின்ஹா. இவர்களை கடுமையாக எதிர்த்த எத்தனையோ உலமாக்கள் இவர்களின் காலடியில் சரணடைந்தனர். அவர்களின் கருத்துக்கள் உண்மையானது என்பதை ஏற்றுக் கொண்டனர். அவர்களைப் புகழ்ந்து எத்தனையோ இமாம்கள், ஆரீபீன்கள் கருத்துக்களை வெளியிட்டனர். 

இப்னு அறபீ குத்திஸ ஸிர்ருஹூ அன்னவர்களைப் புகழ்ந்து கூறிய சிலர் 

01. அஸ்ஸெய்யிதுஷ் ஷெய்ஹ் மஜ்துத்தீன் அல் பைறூஸாபாதீ (றழி) இவர்கள் பின்வருமாறு கூறினார்கள். 

“ஷரீஆ, தரீகா ஆகிய கலைகளில் அஷ் ஷெய்ஹ் இப்னு அறபீ குத்திஸ ஸிர்ருஹூ அன்னவர்கள் அடைந்த அந்தஸ்தை யாரும் அடைந்ததாக நாம் அறியவில்லை. அவர்கள் சரியான கொள்ளையைக் கொண்டிருந்தார்கள்.” 

02. அஸ்ஸெய்யிதுஷ் ஷெய்ஹ் ஸிறாஜுத்தீன் அல் மக்ஸுமி (றழி) அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள். 

“அஸ்ஸெய்ஹ் முஹ்யித்தீன் இப்னு அறபீ குத்திஸ ஸிர்ருஹூ அன்னவர்களின் கருத்துக்களில் ஒன்றையேனும் மறுப்பதை விட்டும் உங்களை நான் எச்சரிக்கின்றேன். வலீமார்களின் இறைச்சிகள் நஞ்சூட்டப்பட்டவைகளாகும். அவர்களை கோபிக்கச் செய்பவனுடைய மார்க்கம் அழிந்து விடுவது உறுதியாகும். அவர்களை கோபிக்கச் செய்பவன் “நஸ்றானீ”யாகவே மரணிப்பான். எவன் அவர்களை தன் நாவு கொண்டு ஏசுகின்றானோ, அவருடைய உள்ளத்தை மரணிக்கச் செய்வதன் மூலம் அல்லாஹுத்தஆலா அவர்களைச் சோதிப்பான். 

03. அஸ்ஸெய்யிதுஸ் ஷெய்ஹ் கமாலுத்தீன் அஸ்ஸமல் கானீ (றழி) அவர்கள். 

“இவர்கள் சிரியாவைச் சேர்ந்த மார்க்க அறிஞர்களில் மிக உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றவர்களாகும். இப்னு அறபீ குத்திஸ ஸிர்ருஹூ அன்னவர்களை முழுமைமயாக விசுவாசம் கொண்டார்கள். 

04. அஸ்ஸெய்யிதுஸ் ஷெய்ஹ் குத்புத்தீன் அல் ஹமவீ (றழி) அவர்கள். இவர்கள் சிரியாவுக்குச் சென்று திரும்பிய வேளை இவர்களிடம் அஸ்ஸெய்ஹ் இப்னு அறபீ குத்திஸ ஸிர்ருஹூ அன்னவர்களை எவ்வாறு பெற்றுக் கொண்டீர்கள்? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் பின்வருமாறு பதில் கூறினார்கள் “கல்வியிலும், துறவறத்திலும், இறை ஞானத்திலும் கரை இல்லாத கடலாக நான் அவர்களைப் பெற்றுக் கொண்டேன்.” 

05. அஸ்ஸெய்யிதுஸ் ஷெய்ஹ் ஸலாஹுத்தீன் அஸ்ஸப்தீ (றழி) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள். “இறை உதிப்பின் கிடைக்கக்கூடிய இறை ஞானத் தத்துவமுடையோரின் கிரந்தங்களைப் பார்வையிட நீங்கள் விரும்பினால் அஷ்ஷெய்ஹ் முஹ்யித்தீன் இப்னு அறபீ குத்திஸ ஸிர்ருஹூ அன்னவர்களின் கிரந்தங்களைப் பார்வையிட்டுக் கொள்ளுங்கள். 

06. அல் ஹாபிழ் அபூ அப்தில்லாஹ் (றழி) அவர்கள், இவர்களிடம் புஸூஸுல் ஹிகம் என்ற நூலில் இப்னு அறபீ குத்திஸ ஸிர்ருஹூ அன்னவர்கள் கூறுகின்ற கருத்துக்களைப் பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் நபீ (ஸல்- அம்) அவர்களின் அனுமதியைக் கொண்டுதான் அந்தக் கிரந்தத்தை அவர்கள் இயற்றினார்கள். இவர்கள் போன்றவர்கள் ஒரு பொழுதும் பொய் சொல்வார்கள் என்று நான் கருதவில்லை என்று சொன்னார்கள். 

07. அஸ்ஸெய்யிதுஸ் ஷெய்ஹ் குத்குத்தீன் அஷ்ஷீறாஸீ (றழி) அவர்கள், இவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள். 

“அஷ்ஷெய்ஹ் முஹ்யித்தீன் இப்னு அறபீ குத்திஸ ஸிர்ருஹூ அன்னவர்கள் ஷரீஅத், ஹகீகத் ஆகிய கலைகளில் சம்பூரணமானவர்களாக ஆகிவிட்டார்கள். அவர்களின் பேச்சை விளங்காதவனும், அவர்களை நம்பாதவனுமே அவர்களில் குறை கூறுவான்.” 

08. அஸ்ஸெய்யிதுஸ் ஷெய்ஹ் பக்றுத்தீன் அர்றாஸீ (றழி) அவர்கள் இப்னு அறபீ குத்திஸ ஸிர்ருஹூ அன்னவர்களைப் பற்றிக் கூறும் போது “அஸ்ஸெய்ஹ் இப்னு அறபீ (றழி) அவர்கள் கண்ணியம் நிறைந்த ஓர் வலீயாக ஆகிவிட்டார்கள்” என்று கூறுகின்றார்கள். 

09. அஸ்ஸெய்யிதுஸ் ஷெய்ஹ் முஹ்யித்தீன் அந்நவவீ (றழி) அவர்கள் இவர்களிடம் முஹ்யித்தீன் இப்னு அறபீ குத்திஸ ஸிர்ருஹூ அன்னவர்களைப் பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் “இப்னு அறபீ அவர்கள் சென்ற ஓர் சமுதாயம் வலீமார்கள் மீது தீய எண்ணம் கொள்வது ஒவ்வொரு புத்தியுள்ளவன் மீதும் ஹறாமாகும். அவர்களின் அந்தஸ்தை அடையாத ஒருவன் அவர்களின் சொற்கள், செயல்களுக்கு வலிந்துரை கொடுப்பது அவசியம்.” என்று கூறினார்கள். 

10. அஸ்ஸெய்யிதுஸ் ஷெய்ஹ் முஹம்மத் அல் மக்ரிபீ அஷ் ஷாதுலீ (றழி) அவர்கள் ஜலாலுத்தீன் அஸ்ஸுயூதி (றழி) அவர்களின் ஞான குருவாகும். இப்னு அறபீ குத்திஸ ஸிர்ருஹூ அன்னவர்கள் பற்றி இவர்கள் கூறும் போது “ஜுனைதுல் பக்தாதீ (றழி) அவர்கள் முரீதீன்களை வளர்ப்பவர்களாக இருப்பது போன்று முஹ்யித்தீன் இப்னு அறபீ குத்திஸ ஸிர்ருஹூ அன்னவர்கள் இறைஞானிகளை வளர்க்கக் கூடியவர்களாக இருக்கின்றார்கள்.” என்று கூறினார்கள். 

இவ்வாறு இப்னு அறபீ குத்திஸ ஸிர்ருஹூ அன்னவர்களப் புகழ்ந்து கூறிய இமாம்கள், ஆரீபீன்கள், வலீமார்கள் அதிகப் பேருள்ளனர். அவர்களில் ஒரு சிலரை மாத்திரம் இங்கே குறிப்பிட்டோம். அஸ்ஸெய்ஹுல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ குத்திஸ ஸிர்ருஹூ அன்னவர்கள் 400 க்கும் அதிகமான கிரந்தங்களை இயற்றி இருக்கின்றார்கள். இவற்றில் அனைத்துக் கலைகளையும் சேர்ந்த கிரந்தங்கள் உள்ளடங்கும். 

தப்ஸீருடைய கலையில் இவர்கள் இயற்றிய அத்தப்ஸீருல் கபீர் எனும் தப்ஸீர் 95 வால்யூம்களைக் கொண்டதாகும். அதே போல அத்தப்ஸீருல் ஸயீர் என்பது 08 வால்யூம்களைக் கொண்டதாகும். 

ஸுபிஸக் கலையில் இவர்கள் இயற்றிய கிரந்தம்தான் “அல் புதூஹாதுல் மக்கிய்யஹ்” என்ற கிரந்தமாகும். ஸூபிகளிடத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்தக் கிரந்தத்தை மக்கா முகர்ரமஹ்வில் வைத்து இயற்றினார்கள். மக்கா முகர்ரமஹ்வுக்கு ஹிஜ்ரி 598ல் வந்தார்கள் இப்னு அறபீ குத்திஸ ஸிர்ருஹூ அன்னவர்கள். 

இது பற்றி அஷ்ஷெய்ஹ் மஜ்துத்தீன் அல்பைறூஸாபாதீ (றழி) அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள். “அஷ் ஷெய்ஹ் முஹ்யித்தீன் இப்னு அறபீ குத்திஸ ஸிர்ருஹூ அவர்கள் இறைஞான தத்துவங்களில் கரையில்லாக் கடலாக ஆகிவிட்டார்கள். மக்கஹ் முகர்றமஹ்வுக்கு அவர்கள் வந்த போது அந்த நேரத்தில் உலமாக்கள், ஹதீஸ்கலை மேதைகள் அனைவரும் இவர்களின் சபைக்கு விரைந்தார்கள். அவர்கள் முன்னே அமர்வதை பறக்கத்தாகக் கருதினார்கள். 

இப்னு அறபீ குத்திஸ ஸிர்ருஹூ அவர்கள் இயற்றிய பெரும்பாலான கிரந்தங்கள் மக்காவிலுள்ள களஞ்சியங்களில் காணப்பட்டன. இவர்கள் மக்காஹ்வில் வைத்து இயற்றிய கிரந்தங்களில் மிகப் பிரசித்தி பெற்றது அல் புதூஹாதுல் மக்கிய்யஹ் என்ற கிரந்தமாகும். இது இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்ட கிரந்தம் என்பதற்கு பின்வரும் சம்பவம் சான்றாகும். அல்புதூஹாதுல் மக்கிய்யஹ் என்ற கிரந்தம் இவர்களின் மாணவர் பத்ர் அல் ஹபஷீ என்பவர் கேட்ட கேள்விக்குரிய பதிலாகும். 

அஸ்ஸெய்ஹுல் அக்பர் அன்னவர்கள் இதை எழுதி முடித்தவுடன் ஒவ்வொரு பேப்பராக கஃபாவின் மேல் வைத்தார்கள். சுமார் ஒரு வருட காலம் இந்தக் கிரந்தம் கஃபாவின் மேல் இருந்தது. இக்காலப் பகுதியில் மக்கஹ்வில் கடுமையான காற்று வீசியது. கடும் மழை பெய்தது. ஆனால் இக்கிரந்தத்தில் ஒரு பேப்பர் கூட நனையவில்லை. பழுதடையவில்லை. இது இறைவனால் இக்கிரந்தம் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பதற்கு தெளிவான ஆதாரமாகும். 

இறுதியாக டமஸ்கஸ் நகரில் தனது இறுதி மூச்சு வரை இறைஞானப் பணியில் ஈடுபட்டார்கள். அதிகமான தத்துவ நூல்களை இயற்றினார்கள். மக்களுக்கு இறைவன் சமூகம் செல்லும் வழிகளைத் தெளிவு படுத்தினார்கள். 

ஹிஜ்ரீ 638 றபீஉனில் ஆகிர் மாதம் பிறை 22ல் வபாத்தானதாகவும், பிறை 28ல் வபாத்தானதாகவும் இரண்டு கருத்துக்கள் கூறப்படுகின்றன. 

இவர்களின் ஜனாஸா நல்லடக்கத்தில் பல்லாயிரம் தலைவர்கள், அமைச்சர்கள், உலமாக்கள் கலந்து கொண்டனர். டமஸ்கஸ்ஸில் வாழ்ந்த அனைத்து மக்களும் இவர்களின் ஜனாஸா நல்லடக்கத்தில் கலந்து கொண்டனர். வியாபாரிகள் தொடர்ந்து மூன்று நாட்கள் தங்களின் கடைகளை மூடி தங்களின் துக்கத்தை வெளிப்படுத்தினர். 

இறுதியாக டமஸ்கஸ்ஸிலுள்ள காஸியூன் மலையடி வாரத்திலுள்ள அஸ்ஸாலிஹிய்யஹ் என்ற இடத்திலுள்ள ஓர் பள்ளிவாயலில் இவர்கள் அடக்கம் செய்யப்பட்டார்கள். 

இவர்களின் றவ்ழஹ் ஷரீபஹ்வின் மேல் பாரிய கட்டிடம் கட்டப்பட்டது. இன்று வரை அவர்களின் றவ்ழஹ் ஸரீபஹ் மக்களால் ஸியாறத் செய்யப்படுகின்றது. அவர்களின் றவ்ழஹ்வை நாடி வரக் கூடிய மக்கள் தங்களின் தேவைகளை முன்வைத்து, அவர்களைக் கொண்டு இறைவனிடம் உதவி தேடுகின்றார்கள். 

அல்லாஹு ஸுப்ஹானஹுவ்வதஆலா ஷெய்ஹுல் அக்பர் நாயகத்தின் பொருட்டைக் கொண்டு எங்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பானாக! 

ஆமீன்! 

குறிப்பு : இக்கட்டுரையில் கூறப்பட்ட விடயங்கள் அனைத்தும் “அல்யவாகீத் அல் ஜவாஹிர், மனாகிபுப்னி அறபீ, துர்ஜுமானுல் அஷ்வாக்” போன்ற கிரந்தங்களில் இருந்து திரட்டப்பட்டவையாகும். 


அஷ்ஷெய்ஹுல் அக்பர், வல் மிஸ்குல் அத்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ கத்தஸல்லாஹு ஸிர்றஹுல் அஸீஸ் அன்னவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரிக்கப்படுகின்றது.

**********************-----------------------***********************

அஷ் ஷெகுல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அரபி (றஹ்) அவர்கள்

                                                                                                                   மௌலவீ  KRM. ஸஹ்லான் (றப்பானீ ) BBA, JP

ஹிஜ்ரி 560ம் ஆண்டு ரமழான் பிறை 27 அன்று (கி.பி 1165 ஆகஸ்ட் 7ம் நாள்) ஸ்பைன் நாட்டின் முர்ஸிய்யா எனும் ஊரில் ​ஷெய்கு அலீ அறபி என்பவர்களுக்கு மகனாக பிறந்தார்கள். 

முஹ்யித்தீன் இப்னு அறபி(றஹ்) அவர்கள் குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (கத்தஸழ்ழாஹு ஸிர்ரஹுல் அஸீஸ்) அவர்களிடம் இவர்களின் தந்தை ஐம்பது வயதாகியும் தனக்கு மகப்பேறு இல்லை என முறையிட்ட போது உங்களின் விதிப்பலகையில் மகப்பேறு எழுதப்படவில்லை. ஆயினும் கவலைப்படாதே என்னுடைய விதியில் எனக்கு ஒரு குழந்தை என் முகுகந்தண்டில் இன்னும் மீதியுள்ளது. அதனை நான் உமக்குத் தருகின்றேன் நீர் என் பின்னே வந்து என் முது கோடு உம் முதுகை வைத்து உரசுவீராக என்று கூறினார்கள். அவ்வாறே அவரும் செய்தார். அதன் பின் “உமக்கு ஓர் அறிவார்ந்த ஆண் குழந்தை பிறக்கும் அவருக்கு முஹம்மது முஹ்யித்தீன் எனப் பெயரிடுங்கள். அவர் தம் காலத்தில் குத்புஸ் ஸமானாக விளங்குவார். அவரது புகழ் அகிலமெங்கும் பரவும் என சுபச் செய்தி கூறினார்கள். இவர்கள் பிறந்த போது ஜீலானி நாயகம் வபாத்தாகி ஐந்து மாதங்கள் கழிந்திருந்தன.

இப்னு அறபி (றஹ்) அவர்கள் தமது தந்தையிடம் திருக்குர்ஆனை ஓதக்கற்றார்கள். பின்னர் மாலிக் மத்ஹபின் அடிப்படை சட்ட திட்டங்களையும் தம் தந்தையிடமே பயின்றார்கள். பின்னர் திருக்குர்ஆன் விரிவுரையை அபூபக்ர் இப்னு கலாஃபியிடமும், ஹதீதுக் கலையை முஅல்லிப் அபுல் ஹசன் ஷரீஹிடமும் மாலிக் மத்ஹபின் விரிவான சட்ட திட்டங்களை அபுல் காசிம் ஷர்ராத்திடமும் பயின்றார்கள். இப்னு அறபி (றஹ்) அவர்களின் அறிவுக் கூர்மையும் அபார நினைவாற்றலும், நற்குணங்களும் அவர்களை மதித்து மரியாதை செய்யுமாறு முதியோர்களையும் தூண்டியது. இளைஞராக இருந்த இப்னு அறபி அவர்களை ஹதீதுகளுக்கு விளக்கம் சொல்லுமாறு கூறி அவர்களது விளக்கங்களை செவி தாழ்திக் கேட்டுக் கொண்டிருந்தனர் முதியோர்கள். 

இளமையில் இருந்தே இப்னு அறபி (றஹ்) அவர்கள் ஆன்மீகவாதிகளுடன் உறவாடுவதில் ஈடுபட்டவர்களாக இருந்தார்கள். அதன் காரணமாக அவர்களுக்கு பல ஆன்மீக அனுபவங்கள் ஏற்பட்டன. இக்காலப்பகுதியில் மாபெரும் தத்துவ ஞானியும், கிரேக்க அறிஞருமான அரிஸ் டோட்டிலின் நூல்கஞக்கு விளக்கம் எழுதியவரும் மனித இனத்தின் மாமேதை என்றும் அக் காலத்தில் கருதப்பட்ட அபுல் வலீத் இப்னு ருஷ்த் அவர்களை சந்தித்தார்கள். சந்தித்த பின்னர் இப்னு ருஷ்த் அவர்கள் இப்னு அறபி அவர்களைப் பற்றி கூறும் போது “ நான் ஆராய்ந்து கண்ட முடிவுகளை இப்னு அறபி அவர்கள் அனுபவித்து அறிந்துள்ளார்கள். இத்தகு ஆன்மீக அனுபவங்களைப் பெற்று இறைவனுடைய கதவுகளை திறந்த ஒருவர் வாழ்ந்த காலத்தில் என்னையும் வாழச்செய்த இறைவனுக்கே எல்லாப் புகழும்! அவரை என் கண்களால் காணும் பாக்கியத்தை எனக்கு வழங்கிய இறைவனுக்கே எல்லாப் புகழும்” என்று கூறினார். 

இவ்வாறு பல்வேறு இறை நேசச் செல்வங்களையும், அறிஞர்களையும் சந்தித்து அளவளாவினார்கள் இப்னு அறபி (றஹ்) அவர்கள். இதன் போது நாளுக்கு நாள் அவர்களின் ஆன்மீகப் படித்தரம் உயர்ந்து வந்தது. தனிமையை நாடிய அவர்கள் ஒரு சிற்றூர் சென்று அங்குள்ள அடக்க விடத்தில் அமர்ந்து தவம் செய்தார்கள். பெரும் பாலும் பட்டினியாயிருக்கும் அவர்கள், சில வேளை ​வெளியில் வந்து காய்ந்த ரொட்டியை எடுத்து தண்ணீரில் நனைத்து உண்டு உயிர் வாழ்ந்து வந்தார்கள். இக் காலப்பகுதியில் ஹிஜ்ரி 594 ல் ஒரு விஷேட கனவொன்று கண்டார்கள். 

இப்னு அறபி (றஹ்) அவர்கள் அதை புதூஹாத்துல் மக்கிய்யா எனும் நூலில் அவர்களே பின்வருமாறு கூறுகின்றார்கள். “அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அரிய​ணையில் வீற்றிருக்கிறார்கள். அவர்களைச் சூழ ஆதம் (அலை) அவர்கள் முதல் உலகில் தோன்றிய 124000ம் நபிமார்களும், பின்னர் வலிமார்களும் அமர்ந்துள்ளார்கள். இவ்வாறான சிறப்பு மிக்க பேரவை கூட்டப்பட்டிருப்பதற்கான காரணத்தை அறிய நான் ஆசைப்பட்டேன். அதற்கான காரணத்தை ஹூத் (அலை) அவர்கள் பின்வருமாறு விபரித்தார்கள். இத்திருச்சபை உமக்காகவே கூட்டப்பட்டுள்ளது. நபீ (ஸல்) அவர்கள், நபீமார்கள், வலீமார்கள் முன்னிலையில் உம்மை இன்றைய தினம் விலாயத்தே முஹம்மதிய்யாவின் இறுதி வலீயாக பிரகடனம் செய்யப் போகிறார்கள். என்று கூறினார்கள். அவர்கள் இவ்வாறு கூறி வாய் மூடு முன் நபி (ஸல்) அவர்கள் அப்பிரகடனத்தை ​வெளியிட்டார்கள். 

இப்பொழுது இப்னு அறபி (றஹ்) அவர்களின் புகழ் மேலும் பரவியது. பலரிடமிருந்தும் அன்புக் காணிக்கை பல நூறு திர்ஹங்கள் கிடைத்தன. அவற்றில் தம் குடும்பச் செலவுக்கு போக எஞ்சியதை ஏழைகளுக்கு வழங்கி வந்தார்கள். பிறரின் உதவிப்பணத்தை கொண்டு வாழ விரும்பாத அவர்கள் டமஸ்கஸ் நகரில் வியாபாரம் செய்தார்கள் 

அங்கு அவர்களுக்கு பிடவைக்கடை ஒன்றும் இரத்தினக்கடை ஒன்றும் இருந்தன. ஒரு நாள் அவர்களின் கடைக்கு மார்க்க விற்பன்னர் ஒருவர் வந்தார். அவர்களை சோதிப்பதற்காக. மாபெரும் ஞானநூல்களை எழுதும் இவர்கள் எவ்வாறு வியாபாரத்துறையில் ஈடுபட்டுள்ளார்கள். என்பது விளங்காத புதிராக இருந்தது. கடைக்குள் நழைந்தும் அவர்கள் பணத்தை குவித்து வைத்து எண்ணிக்கெண்டு இருந்தார்கள். வந்தவரை அமரச் செய்து விட்டு எண்ணுவதில் ஈடுபட்டிருந்த அவர்கள் பாங்கொலியை கேட்டதும் அந்தப்பணத்தை எல்லாம் பெட்டியில் போட்டு விட்டு அவரையும் அழைத்துக் கொண்டு பள்ளிக்கு புறப்பட்டு விட்டார்கள். இது வந்தவருக்கு பெரு வியப்பை அளித்தது. பள்ளியில் அவர்களே இமாமாக நின்று தொழவைத்தார்கள். வந்தவரும் பின்னால் நின்று தொழுதார். அப்பொழுது தம் கைத்தடியை , ஹவ்ழுக்கு அருகில் மறந்து வைத்து விட்டு வந்தது நினைவுக்கு வந்தது. அது வௌ்ளிப் பூண் கட்டப்பட்ட ஐந்து திர்ஹம் மாத்திரம் பெறுமானம் உள்ள கைத்தடி. தொழுகையை விட்டுவிட்டு அதனை எடுந்து வந்து மீண்டும் தொழ அவர் எண்ணினார். அதற்கு மார்க்கத்தில் இடம் உள்ளது என்று அவரின் ​வெளி மனம் கூறியது. 

எனினும் இந்த அற்பப் பொருளுக்காகத் தொழுகையை விட்டுச்செல்வதா என்று அவரின் உள் மனம் வாதித்தது. இப்படியான தடுமாற்றத்துடன் தொழுகையை இமாமுடன் சேர்ந்து தொழுது முடித்தார்கள். 

தொழுது முடித்ததும் “ஹவ்ழ்” அருகே சென்று தம் கைத்தடியை பார்த்தார்கள். அது வைத்த இடத்தில் வைத்த படியே இருந்தது. அதனை மகிழ்ச்சியுடன் எடுத்துக் கொண்டு வந்த பொழுது இப்னு அறபி (றஹ்) அவர்களும் துஆ ஓதி விட்டு வெளியில் வந்தார்கள். தம் முன் எதிர் பட்ட அவரையும் அழைத்துக் கொண்டு உணவுண்ணத் தம் இல்லம் வந்தார்கள். வீட்டில் வகை வகையான உணவுகள் அவர் முன் கொண்டு வந்து பரத்தப்பட்டன. அவரின் உள்ளத்தில் ஒரு கோடி எண்ணங்கள் ஓடி மறைந்தன. “என்ன துறவு இது? பட்டு வாணிபம் செய்து கொண்டு பல வகையான உணவுகளை உண்டு வாழ்வதுவா துறவு?” என தம்முள்ளே தம்மை வினவிக் கொண்டார். 

‘உண்ணுங்கள்’ என்று உபசரித்த வண்ணம் அவரின் முன் பரத்தி வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்களை அவரின் உணவுத்தட்டில் எடுத்து வைத்து உண்ணுமாறு கேட்டுக் கொண்டார்கள். 

“தாங்கள்?” என்று வினவினார் அந்த மார்க்க விற்பன்னர். “எனக்கான உணவுகள் இப்பொழுது வரும்” என்று கூறினார்கள் அவர்கள். 

இவற்றை விட மேலான உணவுகள் அவர்களுக்கென விஷேடமாக தயாரிக்கப்பட்டிருக்கும் போல் இருக்கிறது. என்று எண்ணிக் கொண்டு அவர் சாப்பிட்டார். அப்போது அவர்களின் ஊழியன் ஒரு கோப்பையில் கஞ்சியையும், ஒரு தட்டில் துவையலையும் கொண்டு வந்து அவர்களி்ன் முன் வைத்தார். துவையலை தொட்டுக் கொண்டு அந்தக் கஞ்சியை பிரியத்துடன் குடித்தார்கள். அவர்கள் அதைக் கண்டதும் அவருக்கு தம் கண்களையே தம்மால் நம்பமுடியவில்லை அப்போது அவர்கள் அவரை நோக்கி “சோதித்தது போதுமா? இன்னும் சோதிக்க வேண்டுமா?” என்று புன்முறுவலுடன் வினவியவண்ணம் “நான் இந்த வியாபாரத்தை பிறருக்கு பிழைப்புக்கு வழி ஏற்படுத்துவதற்காக நடத்தி வருகின்றேனே தவிர, வேறில்லை. 

இங்குகுவித்துக்கிடக்கும்பட்டு,நவரத்தினங்களிலோ, பணத்திலோ என்மனம் இலயிக்க நான் ஒரு போதும் அனுமதிப்பதில்லை பட்டும் நவரத்தினமும் கடையில் உள்ளன.பணம் பெட்டியில் உள்ளது. அவற்றை என் உள்ளத்தில் நான் ஒரு போதும் கொலுவேற்றி வைப்பதில்லை” 

“நானோ ஒரு சாமான்யன். என்னையே நான் துன்பத்திற்காளாக்கிப் பழக்கப்பட்டவன். பல தடவைகள் ‘ஹவ்ள்’ நீரை அருந்திக் கொண்டு பட்டினி கிடந்துள்ளேன். பாயில் படுக்காது சந்தூக்கில் படுத்துறங்கியுள்ளேன். நான் இப்பொழுது உண்பதோ இந்த எளிய கஞ்சியேயாகும். “ஆனால் தங்களோ மார்க்க விற்பன்னர். தொழுகையில் தக்பீர் கட்டியவுடன் ஹவ்ள் அருகே தாங்கள் மறந்து வைத்து விட்டு வந்த கைத்தடியின் நினைவு வர, தக்பீரை விட்டுவிட்டு அதனை எடுத்து வர எண்ணிணீர்கள். ஐந்து திர்ஹம் மட்டும் பெறுமதியான அதன் மீது தங்களின் உள்ளம் இலயித்து நின்றது. தங்களின் உடல் தான் குனியவும் குப்புறவிழவும், எழுந்து நிற்கவும் செய்தது என்று கூறினார்கள். அத்துடன் அவர் அவர்களிடம் மன்னிப்புக் கோரி மீண்டார். 

இப்னு அறபி (றஹ்) அவர்கள் மறைவாக வைக்கப்பட்டிருந்த ஆன்மீக இரகசியஙகளை வெளிப்படையாக மக்களுக்கு எடுத்தரைத்த முதல் மனிதராக விளங்கினார்கள். இதனால் ஷைகுல் அக்பர் (மாபெரும் குருநாதர்) என அழைக்கப்படுகின்றார்கள். 

புதூஹாத்துல் மக்கிய்யா, புஸூஸூல் ஹிகம், புதூஹாத்துல் மதனிய்யா, தர்ஜூமானுல் அஷ்வாக், கீமியா அல் ஸஆதத், ஹில்யதுல் அப்தால் முதலான முன்னூற்றுக்குமேற்பட்ட நூல்களை அவர்கள் எழுதியுள்ளார்கள். 

அவர்களின் நூல்களின் தனித்தன்மை என்னவென்றால், அவற்றை ஒருவர் படித்துச் சிந்திப்பின் அவரின் இதயம் விசாலமடைகிறது. அவரின் துன்பங்கள் அகழ்கின்றன. அவரின் சிக்கல்களுக்கு ஒரு முடிவு காணப்படுகிறது. 

இப்னு அறபி (றஹ்) அவர்கள் தங்களின் வாழ்நாளின் இறுதியில் திருக்குர்ஆனுக்கு ஒரு விளக்கவுரை எழுதத் தொடங்கி பதினைந்து பாகங்களுக்கு விளக்கவுரை எழுதினர். இதன் போது அவர்களுக்கு நோய் ஏற்பட்டது. ‘சூரதுல் கஹ்ப்’க்கு விளக்கவுரை எழுதும் போது அதன் 65 வது வசனம் “இவ்விருவரும் வந்த போது (அவ்விடத்தில்) நம் அடியாரில் ஒருவரைக் கண்டார்கள் அவர் மீது நாம் அருள் புரிந்து நமக்குச் சொந்தமான ஒரு ஞானத்தையும் நாம் அவருக்குக் கற்பித்தோம்” என்பதற்கு விளக்கம் எழுதும் போது அவர்களின் மூச்சு நின்றது. இது நிகழ்ந்தது ஹிஜ்ரி 638 ரபீஉல் ஆகிர், பிறை 28 (கி.பி 1240 நவம்பர் 16) வௌ்ளிக்கிழமை இரவிலாகும். 

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜஊன் 

வலீமார்கள் இவ்வுலகில் சூரியனைப் போன்றவர்கள். இங்கு மறைவது போன்று தெரியும் அங்கு உதயமாகி விடுவார்கள். அங்கு மறைவது போன்று தெரியும் இங்கு உதயமாகி விடுவார்கள்.